நாட்டில் அரிசி தட்டுப்பாடு! அரசாங்க தரப்பில் இருந்து வெளியான அறிவிப்பு
நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கு எந்தவித வாய்ப்பும் இல்லை என்று வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் நலன்புரி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் தற்போது சுமார் ஒரு இலட்சத்து நாற்பதாயிரத்திற்கும் (140,000) அதிகமான மெட்ரிக் தொன் சிவப்பு மற்றும் வெள்ளை அரிசி கையிருப்பில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், சந்தையில் அரிசி விலையேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக மாற்று அரிசி இருப்புகளை இறக்குமதி செய்ய தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார வீழ்ச்சி
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக நாட்டில் ஒரு எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ள போதிலும், உலகளாவிய மோதல்கள் தீவிரமடைந்தாலும் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய இடமளிக்கப்போவதில்லை என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

டொலரின் மதிப்பு அதிகரிப்பால் ஏற்படும் பொருளாதார தாக்கங்களை எதிர்கொள்ளும் வகையில், சுற்றுலாத்துறை மற்றும் ஏற்றுமதி வருமானத்தை மேம்படுத்த தற்போதைய அரசாங்கம் தீவிரமாக உழைத்து வருவதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், கடந்த பெரும்போகம் மற்றும் சிறுபோகங்களை போன்றே, எதிர்வரும் பெரும்போகத்திலும் தேவையான உரங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக வழங்கப்படும் உர மானியம் முப்பதாயிரம் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |