இனப்பிரச்சினை தீர்வுக்கான திட்டங்கள் தமிழ் தரப்பு உள்ளிட்ட எவரிடமும் இல்லை - அனந்தி
தமிழ் மக்களின் 70 வருட காலத்துக்கு மேற்பட்ட இனப்பிரச்சினையை ஒருசில மாதங்களுக்குள் தீர்த்துவிட முடியாதெனவும், இனப்பிரச்சினை தீர்வுக்கான திட்டங்கள் தமிழ் தரப்பு உள்ளிட்ட எவரிடமும் இல்லை எனவும் ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகப் பொதுச் செயலளரும் வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அனந்தி சசிதரன் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தலைமைகளின் பங்களிப்புடன் மாத்திரம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்த்துவிடமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இனப்பிரச்சினை தீர்வு பேச்சு

இதேவேளை, அதிபருடனான இனப்பிரச்சினை தீர்வு பேச்சுவார்த்தை மற்றும் உள்ளூராட்சி தேர்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கிடையில் இன்று மாலை கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் அவரது இல்லத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சிறிகாந்தா, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.