பிரான்ஸில் பீதியைக் கிளப்பிய 69 வயதான தாக்குதல்தாரி..! மூவர் பலி
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இன்று நடத்தப்பட்ட துப்பாக்கித் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டு மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
இந்தத் தாக்குதலை நடத்திய 69 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
பாரிஸின் மத்திய பகுதியில் தாக்குதல்
கிறிஸ்மஸ் விடுமுறைக்காக தமது சொந்த இடங்களுக்கு திரும்பும் மக்கள் மற்றும் பொருட்கொள்வனவில் ஈடுபடும் மக்களால் பரபரப்பாக இருந்த பாரிஸின் மத்திய பகுதியில் இன்று நண்பகலுக்கு சற்று முன்னர் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நகரின் 10 ஆம் வட்டாரத்தில் உள்ள குர்திஷ் கலாசார மையத்திற்குள் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
69 வயதான தாக்குதலாளி தன்னிடமிருந்த துப்பாக்கியால் ஏழு அல்லது எட்டு தடவைகள் அங்கிருந்தவர்களை நோக்கிச் சுட்டிருந்தார்.
இதில் மூவர் பலியாகி மேலும் நால்வர் படுகாயமடைந்தனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்குரிய நோக்கம்
இந்தத் தாக்குதலுக்குரிய நோக்கம் அல்லது இலக்கு குறித்து துல்லியமாக தெரிய வராத போதிலும், தாக்குதலாளி ஒரு பிரெஞ்சு பிரஜை எனவும் அவர் ஏற்கனவே இரண்டு கொலை முயற்சிகளை செய்ததன் அடிப்படையில் காவற்துறை பதிவுகளில் உள்ளவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவரை கைதுசெய்த காவல்துறையினர் தாக்குதலுக்கு பயன்படுத்திய ஆயுதத்தை மீட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதி முழவதும் பீதி நிலவியிருந்தது. பல வணிக நிறுவனங்கள் அவசரமாக பூட்டப்பட்டிருந்தன.
இதன் பின்னர் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானா துப்பாக்கிச்
சூடு நடந்த இடத்தைப் இன்று பிற்பகல் பார்வையிட்டுள்ளார்.