நீர் வழங்கல் அமைச்சர் காரியாலய பணிக்குழுவினருக்கு கொரோனாவா? வெளிவந்துள்ள பி.சி.ஆர் முடிவு
நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் பிரத்தியோக செயலாளர் உட்பட அமைச்சரின் 15 பேர் கொண்ட காரியாலய பணிக்குழுவினர் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என பத்தரமுல்ல பொது சுகாதார அதிகாரி காரியாலயம் அறிவித்துள்ளதாக நீர்வழங்கல் அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக நீர்வழங்கல் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரது பிரத்தியேக செயலாளர் உட்பட 15பேர் கொண்ட காரியாலய பணிக்குழுவினருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் அவர்கள் எவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என பத்தரமுல்ல பொது சுகாதார அதிகாரி காரியாலயம் உறுதிப்படுத்தி இருந்தது. இதேவேளை, அமைச்சர் வாசுதேவ நாயணக்காரவின் வாகன சாரதிக்கும் அவரது மெய்ப் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும் கொரோனா தொற்று இல்லை என கொழும்பு மா நகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி உறுதிப்படுத்தி இருக்கின்றார்.
கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் அமைச்சர் வாசு தேவ நாணயக்கார மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் செயலாளர் ஆகியோர் தற்போது குணமடைந்து வருவதாக வைத்திய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.