பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுப்பில் உள்ள மூவரை விடுவிக்க அழுத்தம்
பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள டிவானியா முகுந்தன், மொஹமட் இம்ரான் மற்றும் செல்வநாயகம் சசிகரன் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்துடன் தொடர்புடைய வகையில் அரசாங்கத்தினால் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டிய 7 பரிந்துரைகளை உள்ளடக்கிய புதிய அறிக்கையொன்றையும் சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ளது.
அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தின் பிரயோகத்தை உடனடியாக நிறுத்தவேண்டும் எனவும் அச்சட்டத்தை முழுமையாக இல்லாதொழிக்கவேண்டும் எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.
கிளிநொச்சியைச் சேர்ந்த 34 வயதான டிவானியா முகுந்தன் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கடந்த 2021 மார்ச் மாதம் 29ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு இன்னமும் வழக்குப்பதிவு செய்யப்படாமல் 10 மாதங்களுக்கும் அதிகமான காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, காத்தான்குடியைச் சேர்ந்த 23 வயதான மொஹமட் இமாம் மொஹமட் இம்ரான், கடந்த 2019 மே மாதம் 9ஆம் திகதி விசாரணைகளுக்கென கைதுசெய்யப்பட்டு எவ்வித குற்றச்சாட்டுக்களுமின்றி இரண்டரை வருடங்களுக்கும் அதிகமான காலம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும், கிளிநொச்சியைச் சேர்ந்த 28 வயதான செல்வநாயகம் சசிகரன், கடந்த 2020 மேமாதம் 5 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு இன்னமும் வழக்குப்பதிவு செய்யப்படாமல் ஒன்றரை வருடங்களுக்கும் அதிகமான காலம் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த மூவரது குடும்பத்தினர் முகங்கொடுத்திருக்கக்கூடிய சிக்கல்கள், பிணைக்கோரிக்கையை முன்வைப்பதற்கான வாய்ப்பு, பொருளாதார ரீதியில் அவர்கள் எதிர்கொண்டிருக்கும் தாக்கங்கள் என்பன தொடர்பிலும் மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வித குற்றச்சாட்டுக்களுமின்றி நபரொருவரை நீண்டகாலத்திற்குத் தடுத்துவைப்பதற்கான வாய்ப்பை வழங்கக்கூடிய இச்சட்டத்தினால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுமையை இலங்கையர்கள், குறிப்பாக சிறுபான்மையினத்தவர்கள் தற்போதும் தாங்கிக்கொண்டிருக்கின்றனர்.
பயங்கரவாத தடைச் சட்டமானது சர்வதேச சட்டங்கள் மற்றும் நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைக்கப்படும் என்று அரசாங்கம் பல்வேறு தடவைகள் வாக்குறுதி வழங்கியிருந்தாலும், தற்போது வரை அச்சட்டத்தில் உரியவாறான திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை.
இவ்வாறானதொரு பின்னணியில் பயங்கரவாத தடைச் சட்டத்திருத்த முன்மொழிவுகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கடந்த ஜனவரி மாதம் 4 ஆம் திகதி அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டது.
இருப்பினும் இந்தத் திருத்த முன்மொழிவுகள் அச்சட்டத்தில் காணப்படும் முக்கிய குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்குத் தவறிவிட்டன என்று நாம் கருதுகின்றோம். ஆகவே பயங்கரவாதத்தடைச்சட்டத்தை சர்வதேச நியமங்களுக்கு அமைவாக மாற்றியமைப்பதற்கு இந்தத் திருத்தங்கள் போதுமானவையல்ல.
ஆகவே பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள டிவானியா முகுந்தன், மொஹமட் இம்ரான் மற்றும் செல்வநாயகம் சசிகரன் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இல்லாவிட்டால் அவர்கள் குற்றம் புரிந்தமைக்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் காணப்படும்பட்சத்தில், அவர்களுக்கு எதிராக உரியவாறு வழக்கு தாக்கல் செய்து, சர்வதேச நியமங்களுக்கு அமைவாக நீதிமன்றத்தின் ஊடாக விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும்.
பயங்கரவாத தடைச் சட்டத்தில் மேற்கொள்வதற்கென முன்மொழியப்படும் எந்தவொரு திருத்தமும் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் பிரகாரம் அச்சட்டம் கொண்டிருக்கக்கூடிய கடப்பாடுகளைப் பூர்த்திசெய்யும் வகையில் அமையவேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபை அதன் அறிக்கையின் ஊடாக அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
