பிரித்தானிய இளவரசியின் மருத்துவ ஆவணங்களை விற்க முயற்சி...!
பிரித்தானியாவின் அடுத்த வாரிசான இளவரசர் வில்லியமின் மனைவி, வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனின் (Kate Middleton) இரகசிய மருத்துவ ஆவணங்களைப் பணத்திற்காக விற்க முயன்ற முன்னாள் மருத்துவமனை ஊழியர் ஒருவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் லண்டன் கிளினிக் என்ற தனியார் மருத்துவமனையில் இளவரசி கேட்டுக்கு அடிவயிற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டது.
அந்தச் சமயத்தில் அங்கு பணிபுரிந்த ஊழியர் ஒருவர், இளவரசியின் மிக முக்கியமான தனிப்பட்ட மருத்துவத் தகவல்களைத் திருடி அவற்றை நிதி ஆதாயத்திற்காக வெளியில் விற்க முயன்றதாகப் புகார்கள் எழுந்தன.
தனிப்பட்ட தரவு
இதுகுறித்து பிரித்தானியாவின் தகவல் ஆணையர் அலுவலகம் (ICO) தீவிர விசாரணை நடத்தி வந்தது. தற்போது நிறைவடைந்துள்ள இந்த விசாரணையின் முடிவில், அந்தத் தற்காலிக ஊழியர் திட்டமிட்டே இளவரசியின் தனிப்பட்ட தரவுகளைத் தவறாகப் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அந்த ஊழியருக்கு எதிராக முறையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் ஆணையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

மேலும் இந்தத் தவறு ஒரு தனிநபரால் மட்டுமே செய்யப்பட்டது என்றும் லண்டன் கிளினிக் மருத்துவமனையின் பொதுவான பாதுகாப்பு கட்டமைப்பில் எந்தக் குறையும் இல்லை என்றும் அதில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
44 வயதான இளவரசி கேட், கடந்த ஆண்டு தமக்கு ஏற்பட்ட புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டு தற்போது மீண்டும் தனது அரசுப் பணிகளுக்குத் திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |