மீண்டும் ஈரான் மீது தாக்குதல் :மிரட்டும் ட்ரம்ப்
ஈரானுடனான ஒப்பந்தம் 'இறுதியானது அல்ல' எனவும் அது மாற்றங்களுக்கு உட்பட்டது என்றும் தெஹ்ரான் 'நன்றாக நடந்துகொள்ளவில்லை' என்றால், மீண்டும் 'குண்டு வீசும்' நிலைக்குத் திரும்புவேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை (17)செய்தியாளர்களிடம் தெரிவித்தார்
எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசியுடனான சந்திப்பின்போது செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், "இது எனக்குப் பிடிக்கவில்லை என்றால், நாங்கள் மீண்டும் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்குவோம்" என்று கூறினார்.
ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம்
ஈரான் தலைவர்கள் "நன்றாக நடந்துகொள்ளவில்லை" என்றால், அமெரிக்கா அவர்களின் பிரதேசத்தில் மீண்டும் "குண்டு வீசும்" நிலையைத் தொடங்கும் என்று அவர் எச்சரித்தார்.

தெஹ்ரான் அணு ஆயுதங்களைப் பெறுவதைத் தடுப்பதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம் என்று ட்ரம்ப் கூறினார். "பல காரணங்களுக்காக இது ஒரு சிறந்த ஒப்பந்தம், ஆனால் முதலாவதாக, 99.9% உறுதியாக அவர்கள் ஒருபோதும் அணு ஆயுதத்தைப் பெற மாட்டார்கள்," என்று கூறிய அவர், இந்த ஒப்பந்தத்தை "மிகவும் வலுவானது" என்று வர்ணித்தார்.
ஈரானுக்கு 300 பில்லியன் டொலர் "பொய்க் கதை"
அமெரிக்க வரி செலுத்துவோரின் பணத்தில் ஈரான் அணுகக்கூடிய 300 பில்லியன் டொலர் மேம்பாட்டு நிதி குறித்த செய்திகளையும் அவர் உறுதியாக நிராகரித்து, அதை ஒரு "பொய்க் கதை" என்று அழைத்தார்.

"நாங்கள் முதலீடு செய்யப் போவதில்லை. நாங்கள் 10 காசு கூட கொடுக்கப் போவதில்லை," என்று கூறிய ட்ரம்ப், மற்றவர்கள் முதலீடு செய்ய முன்வரலாம் என்றும் கூறினார்.
"ஈரானின் நடத்தை பற்றி அவர்கள் தெரிந்துகொள்ளும் வரை, சிறிது காலத்திற்கு அவர்கள் இதைச் செய்ய மாட்டார்கள் என்று நான் கூறுவேன்," என்றும் அவர் மேலும் கூறினார்.
ஹோர்முஸ் நீரிணை முழுமையாகச் செயல்படும்
பொருளாதார நிவாரணம், கடல்சார் பாதுகாப்பு போரின் உலகளாவிய பொருளாதாரத் தாக்கம் குறித்துப் பேசிய ட்ரம்ப், பதற்றம் தணிக்கப்பட்டதால் சந்தைகள் எதிர்வினையாற்றி வருவதால் எண்ணெய் விலைகள் "கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளன" என்று தெரிவித்தார்.

ஹோர்முஸ் நீரிணை "ஏற்கனவே பகுதியளவு திறக்கப்பட்டுள்ளது" என்றும், அடுத்த இரண்டு நாட்களுக்குள் இந்த முக்கிய நீர்வழிப்பாதை முழுமையாகச் செயல்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி மேலும் கூறினார்.
ஒப்பந்தம் ஏற்படாவிட்டால், ரொக்கெட்டுகள் மற்றும் கண்ணிவெடிகளின் அபாயம் காரணமாக அந்த நீரிணை மூடப்பட்டே இருக்கும் என்பதால், உலகம் ஒரு "பொருளாதார மந்தநிலையை" எதிர்கொண்டிருக்கும் என்று அவர் வாதிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |