தொடர் சிறைச்சாலை மோதல்கள் : உயர் அதிகாரிகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைப்பு
இலங்கையின் சிறைச்சாலைகளுடன் சம்பந்தப்பட்ட அனைத்து உயர் அதிகாரிகளையும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் பல சிறைச்சாலைகளில் கடந்த சில நாட்களாகப் பதிவாகியுள்ள அமைதியின்மை நிலவரங்கள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய, இந்தக் கலந்துரையாடல் எதிர்வரும் 18 ஆம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நடைபெறவுள்ளதாக அதன் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைகள் திணைக்களம்
எதிர்காலத்தில் இதுபோன்ற அமைதியின்மைச் சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதே இதன் நோக்கமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்குமாறு சிறைச்சாலைகள் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள், காவல்துறை மாஅதிபர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சிறைக் கைதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான உரிய பொறிமுறையொன்றை அரசாங்கம் நடைமுறைப்படுத்தத் தவறினால், இந்த விடயத்தை ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் ஆணையாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |