யாழில் ரணில் பார்த்தது வெறும் ட்ரெய்லர் மட்டுமே - சுதந்திர தினத்திற்கு பின்னர் பிரமாண்ட படம் காட்டப்படும்!
சிறிலங்கா அதிபர் எதிர்வரும் 75வது சுதந்திர தினத்திற்கு முன்பு தமிழ் மக்களுடைய நிரந்தரமான அரசியல் தீர்வை பற்றி ஒரு முடிவு காணலாம் என கூறுகின்றார்.
ஆனால் அது தொடர்பான முன்னேற்றமான செயற்பாடுகளை நாங்கள் அவதானிக்க கூடியதாக இல்லை என தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்த வேளை மக்களால் பாரிய எதிர்ப்பு காட்டப்பட்டிருந்தது. அத்துடன் சுவாரசியமான சம்பவங்கள் நடந்திருந்தன.
ரணில் பார்த்தது ட்ரெய்லர் மட்டுமே
தேசிய பொங்கல் தினத்தில் யாழ்ப்பாணத்திலே அதிபர் சந்தித்த எதிர்ப்பு வெறும் ட்ரெய்லர்(trailer) மாத்திரமே அதாவது படத்தின் ஆரம்ப விடயங்கள். மிகுதி விடயங்களை எதிர்வரும் பெப்ரவரி 4ம் திகதிக்கு பிற்பாடும் தமிழ் மக்களை ஏமாற்றும் ஒரு செயற்பாடு என மக்கள் உணர்ந்தால் மிகுதி படத்தையும் நாங்கள் அதிபருக்கு காட்டக் கூடியதாக இருக்கும் அதற்கான திரைக்கதை, வசனம் அனைத்தும் தயார்படுத்தல் நிலையில் இருக்கின்றது.
இவற்றினை சந்திப்பதற்கு தயாராக இருக்க வேண்டும். அதற்கு முன்பாக அவர் தமிழ் மக்களினுடைய பிரச்சினைகள் தொடர்பாக ஒரு சரியான முடிவை எடுக்க வேண்டும் அவருடைய மட்டக்களப்பு மாவட்ட வருகையை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். ஏனெனில் மட்டக்களப்பில் இளைஞர்கள் இருக்கிறார்கள் என்பதை இங்கு கூற விரும்புகிறேன்.
உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக சகல ஆயத்தங்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக நாங்கள் இறுதிக்கட்டத்திற்கு வந்திருக்கின்றோம். எங்களுக்கு பல வட்டாரங்களில் புதிய சவால்கள் காத்துக் கொண்டிருக்கிறன. ஒருவரை தான் நாங்கள் நிறுத்தலாம் ஆனால் 6, 7 என அதிகமான விண்ணப்பங்களை காணக்கூடியதாக இருக்கின்றது.
ஜனநாயக எதிர்ப்பைக்காட்டும் வாய்ப்பு
இம்முறை பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் அனைத்து இடங்களிலுமே நாங்கள் சமமான பங்குகளை செய்வதற்கு முயற்சி எடுத்து இருக்கின்றோம். இதிலே குறிப்பாக அதிபருக்கு சொல்ல வேண்டிய விடயம், நாங்கள் வீதியிலே இறங்கி ஒரு பாடம் படிப்பிக்கிறதை போன்று ஜனநாயக வழியிலும் அதிபருக்கு செய்தியினை நாங்கள் சொல்ல வேண்டும்.
விதியில் இறங்கி ஒரு எதிர்ப்பு அல்லது தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை தொடர்ந்து அரசாங்கங்கள் புறக்கணித்ததன் தொடர்பாக எங்களுடைய எதிர்ப்பை தெரிவித்திருந்தாலும் கூட ஜனநாயக வழியிலும் அதை தெரிவிக்கின்ற ஒரு வாய்ப்பு எதிர்வரும் இந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் வரும்.
தமிழ் மக்களுடைய வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்களுடைய எதிர்காலத்துக்காகவும் தமிழ் பேசும் மக்களுடைய நலனுக்காகவும் 1949 ஆம் ஆண்டில் இருந்து செயற்பாட்டு கொண்டிருக்கும் இலங்கை தமிழரசு கட்சியினுடைய வீட்டு சின்னத்திற்கு வடக்கு கிழக்கில் வாழும் மக்கள் அனைவரும் வாக்களிப்பதன் ஊடாக ஜனநாயக வழியிலே நாங்கள் அதிபருக்கு தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை எவ்வாறு சொல்ல முடியும்.
வீட்டிற்கே அதிக வாக்கு
எங்களுடைய சமஸ்டி முறையிலே நிரந்தரமான அரசியல் தீர்வை நாங்கள் அடைய வேண்டும் என எதிர்பார்க்கின்ற வேளையில் அதை 1949 ஆம் ஆண்டில் இருந்து வலியுறுத்திக் கொண்டு வரும் தமிழரசுக் கட்சியினுடைய வீட்டு சின்னத்துக்கு வாக்களிப்பதனூடாக அதை நாங்கள் செய்யக்கூடியதாக இருக்கும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த கால தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டு சின்னத்தை விட கூடுதலான வாக்குகள் ஏனைய கட்சிகளுக்கு கிடைத்தது. அதாவது மணி, பூனை, சைக்கிள், படகு, மொட்டு என வாக்குகள் இடப்பட்டன.
இம்முறை நிச்சயமாக எங்களுடைய மக்கள் அனைவரும் ஒன்றாக திரண்டு வீட்டு சின்னத்துக்கு வாக்களிப்பது தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை நாங்கள் எங்களுக்கான சமஸ்டி முறையான தீர்வை நோக்கி போகிறோம் என்பதற்காக மக்கள் கொடுக்கும் ஒரு ஆணையாக தான் இருக்கும்.
மண்வளங்கள் கொள்ளை
கடந்த காலத்தில் ஒரு சில சபைகளில் சில வட்டாரங்களில் நாங்கள் தோல்வியடைந்தாலும் கூட மக்கள் இறுக்கமான ஒரு முடிவை வைத்திருக்க வேண்டும். கடந்த காலத்தில் உண்மையிலேயே நீங்கள் ஒரு சிலர் எடுத்த முடிவுகளினால் இன்று எங்களுடைய மாவட்டத்தில் இருக்கின்ற மண்வளங்கள் முழுமையாக கொள்ளையடிக்கப்பட்டு இருக்கின்றன.
குறிப்பாக வாகரை பிரதேசத்தை எடுத்தால் அங்கு மீன்வளர்ப்பு திட்டங்கள் போன்ற விடயங்களை கொண்டு வந்து அந்த பிரதேசத்திலே வாழும் மக்களுக்கான வாழ்வாதாரத்தை அழித்து தங்களுடைய அரசியல் அல்ல கைகளுக்கு வருமானம் ஏற்படுத்தும் வகையான செயல்பாடுகளை செய்த கட்சிகளை மக்கள் நிராகரிப்பதற்கான சரியான சந்தர்ப்பம் இது எனவும் தெரிவித்துள்ளார்.
