மன்னார் - புத்தளம் வீதி திறக்காவிட்டால் ரமழானுக்கு பின் போராட்டம்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை
100 வருடங்கள் பழமையான மன்னார் -புத்தளம் வீதியை உடனடியாக திறக்குமாறு அரசாங்கத்திடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
அல்லது அதற்கு மாற்றுப் பாதையை கடலோரமாக அமைத்து தர வேண்டும் என்றும் இல்லையெனில் ரமழானுக்கு பின்னர் மக்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்துவோம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்றில் இது தொடர்பில் நேற்று(19.02.2026) உரையாற்றிய அவர்,
மன்னார் - புத்தளம் வீதி
“அத்தோடு மன்னார் - புத்தளம் வீதியை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தபோது பொய்யான கருத்துக்கள் இந்த சபையில் தெரிவிக்கப்பட்டது.

அதனால் 100 வருடம் பழைமைவாய்ந்த இந்த வீதியை திற்ந்து தாருங்கள் அல்லது அதற்கு மாற்று பாதையை கடல் ஓரமாக அமைத்துத்தாருங்கள் இல்லையெனில் ரமழானுக்கு பின்னர் மக்களை ஒன்றிணைத்து போராட்டம் மேற்கொள்வோம்.
இந்த பாதை கம்பஹாவிலோ அம்பாந்தோட்டையிலோ இருந்தால் இவ்வாறு மூடி வைத்திருப்பீர்களா?
அந்த பாதையை அதிகம் தமிழ், முஸ்லிம் மக்கள் பயன்படு்த்துவதாலே உங்களது கண்கள் இந்த விடயத்தில் குருடாக இருக்கின்றன.
அத்துடன் வில்பத்துவில் காடுகள் அழிக்கப்பட்டதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க பெரிய அறிவாளி போன்று பேசுகிறார்.
காடு அழிக்கப்படவில்லை
அவர் தெரிவிக்கும் விடயங்கள் அனைத்தும் பொய்யான கருத்தாகும். வில்பத்துவில் ஒரு அங்குலம்கூட காடு அழிக்கப்படவில்லை.

விரட்டப்பட்ட முஸ்லிம்கள் அவர்களின் சொந்த மண்ணிலேயே குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். 20 வருடங்களுக்கு பின்னர் அந்த காணிகள் காடாக இருந்தன.
அதனால் அந்த மக்களை குடியேற்ற காடுகளை அழிக்க வேண்டி ஏற்பட்டது. அதனையும் சட்ட ரீதியிலே மேற்கொண்டிருந்தேன். அவ்வாறு இல்லை என்றால் முடிந்தால் அதனை நிரூபியுங்கள்.
மன்னாரில் அந்த மக்களை மீள்குடியேற்றுவதற்காக இந்த காடுகளை அழித்ததாக தெரிவித்து, மன்னார் புத்தளம் வீதியை திறக்காமல் இருப்பதற்கு இந்த சபையில் பொய் குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 7