இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் மீண்டும் தமிழர் தரப்பைச் சந்திக்கும் அரச தரப்பு!
இனப்பிரச்சனைக்கான தீர்வு குறித்து இன்று மீண்டும் தமிழர் தரப்பை அதிபர் ரணில் விக்கிரமசிங்க சந்திக்கவுள்ளார்.
குறித்த சந்திப்பு இன்று மாலை அதிபர் செயலகத்தில் நடைபெறவுள்ளது.
இலங்கை அதிபர் உள்ளிட்ட அரச தரப்பினருடன் தமிழ்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.
காரணம்

நடந்து முடிந்த சர்வகட்சி தலைவர்கள் கூட்டத்தில் முன்மொழியப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் ஆராய்வதற்கும், அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்கும் குறித்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்கேற்கவுள்ள தரப்பினர்

இன்றைய கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, ரெலோ, புளொட் ஆகிய தமிழ்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் பங்கேற்றவுள்ளனர்.
அந்தவகையில் குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, எம்.ஏ. சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
குறித்த சந்திப்பில் அரச தரப்பின் சார்பில் அதிபர் ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன, அமைச்சர்களான விஜயதாஸ ராஜபக்ச, அலி சப்ரி, பிரசன்ன ரணங்க, சுசில் பிரேமஜய்ந்த ஆகியோர் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
கடந்த கூட்டத்தில் முன்மொழியப்பட்ட தீர்மானங்கள்

காணி ஆக்கிரமிப்பு, ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை மீள ஒப்படைத்தல், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்குத் தீர்வு, 13 ஆம் திருத்தச் சட்ட ஏற்பாடுகளை முழுமையாக நடைமுறைப்படுத்துதல், நீக்கப்பட்ட அதிகாரங்களை மீள இணைத்தல், மாகாண சபைத் தேர்தல், இனப்பிரச்சினைத் தீர்வு போன்ற சர்வகட்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் இன்று ஆராயப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.