கருக்கலைப்புச் சட்டம் தொடர்பில் நீதி அமைச்சரின் பதில்!
கருக்கலைப்பு தொடர்பாக அனைத்து தரப்பினருடன் கலந்துரையாடி பிரேரணை சமர்ப்பித்தால், அது தொடர்பாக ஆராய்ந்து சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளத் தயார் என நீதி அமைச்சர் அலிசப்ரி (Ali Sabry) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது ஆளும் தரப்பு உறுப்பினர் சாந்த பண்டார இடையீட்டு கேள்வி ஒன்றை முன்வைத்தார்.
பலவந்தமாக துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகும் பெண்ணின் கருவறையில் உருவாகும் கருவை இல்லாமலாக்குவது தொடர்பாக சட்டரீதியில் பிரச்சினை இருந்து வருகின்றது.
இது மிகவும் கவலைக்குரிய பிரச்சினை என்றும் இந்நிலைக்கு ஆளாகும் பெண், பல்வேறு அசெளகரியங்கள் மற்றும் சமூகத்தில் தாழ்த்தப்படும் நிலை உருவாக்குவதாகவும் சாந்த பண்டார குறிப்பிட்டார்.
மேலும் பிறக்கும் குழந்தையும் காலம்பூராக சமூகத்தில் இழிவுபடுத்தல்களுக்கு ஆளாக நேரிடுகிறது என சாந்த பண்டார தெரிவித்த நிலையில் இதற்கு பதில் வழங்கும் போதே நீதி அமைச்சர் அலிசப்ரி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
