உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : சாலேயை உடன் பதவி நீக்க வலியுறுத்து
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக வெளிவந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சுரேஷ் சாலேயை உடனடியாக பதவி நீக்கம் செய்து, அவருக்கு எதிராகவும் பிள்ளையான் எனும் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு எதிராகவும் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென தேசிய மக்கள் சக்தி (NPP) இன்று அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தமக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள சுரேஷ் சாலே அரச புலனாய்வு சேவையின் (SIS) பணிப்பாளராக இருக்கும் நிலையில் விசாரணை நடத்துவது அபத்தமானது என செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
குண்டுதாரிகளுடன் நேரடித் தொடர்பு
“சனல் 4 காணொளியில் அசாத் மௌலானா வெளிப்படுத்தியுள்ளபடி, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானுக்கும் சுரேஷ் சாலேக்கும் ஈஸ்டர் ஞாயிறு குண்டுதாரிகளுடன் நேரடித் தொடர்பு இருந்தது தெளிவாகிறது.
"கோட்டாபய ராஜபக்ச, அசாத் மௌலானா மற்றும் பிள்ளையான் ஆகியோர் சேர்ந்து நிற்கும் புகைப்படங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பிள்ளையானுடனான தொடர்பை மௌலானாவே வெளிப்படுத்தியுள்ளார். விசாரணைகள் சரியான திசையில் செலுத்தப்படாததால், தாக்குதல்களின் உண்மையாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் இன்னும் தலைமறைவாக உள்ளனர்.
கோட்டாபயவை விசாரிக்க தடை இல்லை
தாக்குதல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட சுரேஷ் சாலே, அதிபராக பதவியேற்றவுடன் கோட்டாபய ராஜபக்சவினால் எஸ்ஐஎஸ் இயக்குநராக நியமிக்கப்பட்டார் என்றும், சாலேயின் நியமனத்திற்கும் ஈஸ்டர் தாக்குதல்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கோட்டாபய ராஜபக்ச தற்போது அதிபராக இல்லாத காரணத்தினால் அவருக்கு எதிரான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும், விசாரணையை ஆரம்பிப்பதில் எந்தவிதமான தடையும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.