நாட்டிற்கான அரிசி இறக்குமதி குறித்து வெளியான அறிவிப்பு...!
நாட்டின் தேவைக்கேற்ப அரிசியை இறக்குமதி செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரிசி இறக்குமதி
இதனடிப்படையில் சந்தையிலுள்ள சம்பா மற்றும் கீரி சம்பா அரிசிகளுக்கு மாற்றீடாகக் கடந்த ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் 120,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
தேவையேற்பட்டால் மாத்திரமே அரிசி இறக்குமதி செய்வது குறித்து ஆராயப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத் தகவல் தொடர்புத் திணைக்களம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் நெல்லை அரிசியாக மாற்றுவதற்கும் உருளைக்கிழங்கைக் கொள்வனவு செய்வதற்கும் கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனம் (சதொச) நேரடியாகத் தலையிட்டுள்ளதாக அமைச்சர் இக்கூட்டத்தொடரில் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கை 220 ரூபா என்ற அடிப்படையில் கொள்வனவு செய்து அவற்றைச் சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக நுகர்வோருக்கு நியாயமான விலையில் விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நெல்லை உலர்த்துதல், களஞ்சியப்படுத்துதல் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காகக் கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனம் ஊடாக 1,000 மில்லியன் ரூபா (ரூபா 1 பில்லியன்) நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக இக்கூட்டத்தின் போது தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |