தொன் கணக்கான அரிசி இறக்குமதி- காரணத்தை வெளியிட்ட அமைச்சர்!
அரிசி ஆலைகளின் உரிமையாளர்களது தன்னிச்சையான நடவடிக்கைகளை குறைப்பதற்காகவே ஒரு இலட்சம் மெட்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிரவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரவை நேற்று கூடியது. இதன் போது ஒரு இலட்சம் மெட்றிக் தொன் அரசியை இறக்குமதி செய்வதற்காக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன முன்வைத்த யோசனைக்கு நேற்று அமைச்சரவை அனுமதியளித்தது.
இந்நிலையில் நாடாளுமன்றில் இன்று கருத்துரைத்த அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, அரிசி ஆலைகளின் உரிமையாளர்களுக்கு ஒரு கிலோவுக்கு 20 முதல் 30 ரூபா வரை இலாபம் கிடைக்கின்றது. விவசாயிகள் தமது நெல்லை விற்பனை செய்து விட்ட போதிலும் சந்தையில் அரசியின் விலை அதிகமாகவே உள்ளது. இதன் காரணமாகவே அரிசியை இறக்குமதி செய்வதற்கு தீர்மானித்ததாக அவர் தெரிவித்தார்.