தத்தளிக்கும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம்! கை விரித்த அரசாங்க வங்கிகள்
அரசாங்க வங்கிகள், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு கடன் வழங்க முடியாது என அறிவித்துள்ளமையால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஏற்கனவே 75,000 கோடி ரூபா கடன் சுமையுடன் இருப்பதனால் அதற்கு மேலதிமாக கடன் வழங்க முடியாது என மக்கள் மற்றும் இலங்கை வங்கிகள் தெரிவித்துள்ளன.
ஏற்கனவே அரச வங்கிகளுக்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 37,000 கோடி ரூபா செலுத்த வேண்டியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் எரிபொருள் கொள்வனவு செய்வதற்காக மேலும் 1036 கோடி ரூபா கடன் கோரிய போதிலும் அந்த கோரிக்கையை அரச வங்கிகள் நிராகரித்துள்ளன.
பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மொத்தமாக 11000 கோடி ரூபா நட்டமடைந்துள்ளதாகவும், நாளாந்தம் 55 கோடி ரூபா நட்டமடைவதாகவும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தார்.
எரிபொருள் கொள்வனவின் போது, அரசாங்கம் வரிச் சலுகை வழங்காவிட்டால் எதிர்காலத்தில் ஒரு லீற்றர் டீசல் 52 ரூபாவாலும், ஒரு லீற்றர் பெற்றோல் 19 ரூபாவாலும் அதிகரிக்கப்படும் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
