நீதிமன்றிற்கு விசமிகள் தீ வைப்பு - சாம்பலான ஆவணங்கள்; முகமூடியணிந்தவர்களுக்கு வலை வீச்சு!
அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற கட்டித் தொகுதிக்கு சிலர் தீ வைக்கும் சிசிரிவி காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
குறித்த நபர்கள் தொடர்பாக அடையாளம் தெரிந்தால் உடனடியாகத் தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த புதன்கிழமை அதிகாலை 3 மணியளில் கட்டிடம் தீ பற்றியெரிவதை அவதானித்த காவல்துறையினர் மற்றும் தீயணைக்கும் படையினர், உடனடியாக செயற்பட்டு தீயை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்தனர்.
தீயில் எரிந்து சாம்பலாகிய கட்டடப் பகுதி

இருந்தபோதும் கட்டிடத்திலுள்ள வழக்கு பதிவேட்டு அறை மற்றும் திறந்த நீதிமன்றம் உட்பட பல பரிவுகள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளதுடன் கட்டிடத்திற்கு பலத்த சேதமும் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில் நீதிமன்றத்துக்கு அருகிலுள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவியில் 3 பேர் முகத்தை மூடியவாறு நீதிமன்ற வளாகத்தில் நுழைந்து கட்டிடத்திற்கு தீ வைத்துவிட்டு தப்பி ஓடும் காட்சி பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக விசேட காவல்துறை குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நபர்கள் தொடர்பாக அடையாளம் தெரிந்தவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாம்பலாகிய ஆவணங்கள்

இதேவேளை அக்கரைப்பற்று நீதிமன்றக் கட்டடம் தீ பற்றி எரிந்ததில் அங்குள்ள ஆவணங்கள் அனைத்தும் எரிந்து அழிவடைந்துள்ளன எனத் தெரியவருகிறது.
இந்த தீ விபத்தில் அக்கரைப்பற்று நீதவான் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களின் ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறை முற்றாக எரிந்துள்ளதாகவும், அங்கிருந்த கோப்புகள் (Files) அனைத்தும் சாம்பலாகி விட்டதாகவும் தெரியவந்துள்ளது.
நீதிமன்ற விடுமுறை

சுமார் 16 ஆயிரம் கோப்புகள் எரிந்து சாம்பலாகியுள்ளன என, பாதுகாப்புத் தரப்பினரிடமிருந்து கிடைத்த உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் கூறுகின்றன. தற்போது நீதிமன்ற விடுமுறைக்காலம் என்பதால், நீதிமன்றங்கள் சில நாட்களாக இயங்கவில்லை.
அக்கரைப்பற்று நீதிமன்றக் கட்டடத்துக்கு அருகில் உதவி காவல்துறை அத்தியட்சகர் காரியாலயமும், முன்பாக அக்கரைப்பற்று காவல் நிலையமும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




