நான் ஜோசப்பரராஜசிங்கம் என்பவரை கண்டதே கிடையாது! வீண்பழியை சுமத்தி கூட்டமைப்பே சிறையில் அடைத்தது
நல்லாட்சி அரசாங்கம் பல அசிங்கங்களை நடத்திய போது யாரும் அதனை கண்டுகொள்ளாதவர்கள் இன்று ஊடக தர்மம், சட்டம், பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் குரல் கொடுப்பதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தினை உருவாக்கிய பிதாமக்கள் என்னை தண்டிக்க வேண்டும், மற்றவர்களை விடுதலை செய்ய வேண்டும் என இரட்டை முகத்தினை காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், நான் ஜோசப்பரராஜசிங்கம் என்பவரை கண்டதே கிடையாது. ஒரு தடவை தூரத்தில் இருந்து பார்த்துள்ளேன்.
எனவும் இவ்வாறான நிலையில் அவரை கொலை செய்ததாக வீண்பழியை சுமத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பு சிறையில் அடைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
ஜோசப்பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தார். விடுதலைப்புலிகள் அன்றைய காலத்தில் வெற்றியடைந்தவர்களை கொலை செய்து விட்டு வேறு நபர்களை நியமனம் செய்தனர்.
அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பினை சேர்ந்தவர்கள் இருக்கின்றனர்.
அது தொடர்பில் எந்தவித விசாரணைகளும் செய்யப்படவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.