விசேட வைத்திய நிபுணர் மஹேஷிக்கு பிணை : நீதிமன்றின் அதிரடி உத்தரவு
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் மஹேஷி விஜேரத்னவை (Maheshi Wijeratne) பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (15) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை உபகரணங்களை அதிக விலைக்கு விற்பனை செய்து ஊழல் செய்ததாக சந்தேகத்தின் பேரில் வைத்தியர் மஹேஷி விஜேரத்ன கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
விதிக்கப்பட்ட தடை
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் (CIABOC) மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகளின் வாதங்களை பரிசீலித்த பின்னர், பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க, சந்தேக நபரை 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 5 மில்லியன் ரூபா மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்க உத்தரவிட்டார்.
மேலும், சந்தேக நபர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்குள் நுழைவதற்கும், வெளிநாடு பயணிப்பதற்கும் தடை விதித்து நீதிவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

