அமைச்சுப் பதவிகளை துறக்கத் தயார் - கோட்டாபய மகிந்தவிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த அமைச்சர்
அமைச்சரவை கூட்டுப்பொறுப்பை ஒருபோதும் மீறவில்லை என சிறிலங்கா அமைச்சர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
அமைச்சரவையில் விவாதிக்க வேண்டிய விடயங்களை வெளியில் விமர்சிப்பது அமைச்சரவை கூட்டுப்பொறுப்பை மீறும் செயற்பாடு எனின், அமைச்சரவையில் இரகசியமான தீர்மானங்களை முன்னெடுப்பதும் அமைச்சரவை கூட்டுப்பொறுப்பை மீறும் செயற்பாடென அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அமைச்சுப் பதவிகளை துறக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் தயக்கமின்றி தீர்மானம் எடுப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
அமைச்சரவை கூட்டுப்பொறுப்பை மீறும் விதத்தில் அமைச்சர்கள் சிலர் செயற்படுவதாகவும் அவர்கள் அமைச்சுப்பதவிகளை துறந்து அரசாங்கத்தை விட்டு வெளியில் சென்று தமது விமர்சனங்களை முன்வைக்க முடியும் எனவும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்திருந்தார்.
குறித்த விமர்சனத்தை எதிர்கொள்ளும் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தமது நிலைப்பாட்டை தெரிவித்த போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டில் நிதி நெருக்கடி நிலையொன்று ஏற்பட்டுள்ளதை மறுப்பதற்கு இல்லை எனவும், அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனை நாம் வெளிப்படையாக தெரிவிப்பதில் எந்த தவறும் இல்லை எனவும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அதேபோல் அமைச்சரவை கூட்டுப்பொறுப்பை தாம் ஒருபோதும் மீறவில்லை எனவும், அமைச்சரவையில் ஒரு சில தீர்மானங்கள் மறைமுகமாக முன்னெடுக்கப்படுமாயின், இரகசிய ஆவணங்கள் கைச்சாத்திடப்படுகிறது எனின், அதுவும் அமைச்சரவை கூட்டுப்பொறுப்பை மீறும் செயற்பாடு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நாம் அரசாங்கத்தை குழப்பியடிக்க ஒருபோதும் முயற்சிக்கவில்லை எனவும் மாறாக அரசாங்கம் விடும் சில தவறுகளை திருத்திக்கொண்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டுக்கு உகந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்க தாம் கடமைப்பட்டுள்ளதாகவும், அமைச்சரவைக்குள் தான் உள்ளிட்ட மூன்று அமைச்சர்கள் அங்கம் வகிப்பது எவருக்கும் தடையாக உள்ளது என்றால் அதனை தம்மால் பெரிதுபடுத்த முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறெனினும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் நினைத்தால் எமது அமைச்சுப்பதவிகளை மாற்றவோ அல்லது அமைச்சுப்பதவியில் இருந்து நீக்கவோ முடியும் எனவும் அமைச்சர் உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.
You may like this