தென்னிலங்கை ஊடகவியலாளர் மீதான தாக்குதலின் எதிரொலி- வாக்குமூலத்திற்காக அழைக்கப்பட்ட கட்சித் தலைவர்!
இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவின் பிலியந்தலை வீட்டின் மீது நடத்தப்பட்ட கல் மற்றும் மலக்கழிவு தாக்குதல் சம்பந்தமாக வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காக எமது மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சமந்த பெரேரா அழைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிலியந்தலை காவல்துறையினரால் இன்றைய தினம் வாக்குமூலம் பெறுவதற்கு அழைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமுதித்தவின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னர், சமுதித்த, தனது வலையெளி தளத்தில் சமந்த பெரேராவுடன் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி இருந்தார்.
இதன் போது அத்துரலியே ரதன தேரர், கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்டோர் குறித்த முக்கியமான விடயங்கள் சம்பவங்கள் பற்றி பேசப்பட்டிருந்தது.
நேர்காணலையடுத்தே சமுதித்தவின் பிலியந்தலை வீட்டிக்கு வாகனம் ஒன்றில் சென்ற நான்கு பேர், கடந்த 15 ஆம் திகதி இந்த தாக்குதலை நடத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.