காட்டிக்கொடுத்த மைத்திரி - எதிர் முறைப்பாட்டுடன் அத்துரலிய!
நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர், முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளார்.
றோயல் பார்க் கொலை சம்பவத்தின் குற்றவாளிக்கு பொது மன்னிப்பு வழங்கியமை சம்பந்தமாக மைத்திரிபால சிறிசேன, அண்மையில் வெளியிட்டிருந்த தகவலுக்கு எதிராக இந்த முறைப்பாட்டை செய்துள்ளதாக ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
மைத்திரிக்கு எதிராக முறைப்பாடு
அண்மையில் சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மைத்திரிபால சிறிசேன, றோயல் பார்க் கொலை சம்பவத்தின் குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்குமாறு, அத்துரலியே ரத்ன தேரர் கோரிக்கை விடுத்ததாக கூறியிருந்தார்.
குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் முறைப்பாடு செய்த பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
ஜூட் மாந்த ஜயமஹா என்ற நபரை விடுதலை செய்யுமாறு சிறைச்சாலையை அடிப்படையாக கொண்டு இயங்கும் விசேட நிபுணர்கள் குழுவே உத்தரவிட்டது.
விடுதலைக்கு யார் காரணம்
அந்த குழுவில் முன்னாள் நீதிபதிகள், சட்டத்தரணிகள், மனநல மருத்துவ நிபுணர்கள் உட்பட முக்கியமானவர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
இவர்களே விடுதலை செய்யக் கூடிய நபர்கள் குறித்த விசாரணைகளை நடத்துவார்கள். அவர்களே விடுதலை செய்யுமாறும் பரிந்துரைத்தனர்.
ஜெயமஹா என்ற நபருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைத்து, சில வருடங்கள் சென்ற பின்னர், அவரை மரண தண்டனையில் இருந்து விடுவிக்குமாறு விசேட நிபுணர்கள் குழு பரிந்துரைத்திருந்தது எனக் கூறியுள்ளார்.