அரசின் மூடநம்பிக்கையே இத்தகு நிலைக்கு காரணம் - வெளிப்படையாக கூறிய முஜிபுர் ரஹ்மான்
இலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்தமைக்கு அரசாங்கத்தின் மூடநம்பிக்கை தீர்வுகளே காரணம் என ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
பிசிஆர் பரிசோதனைகளை குறைக்குமாறு அரசாங்க தரப்பு தம்மிடம் வேண்டியதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் வெளிப்படையாகவே கூறியுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
கொரோனா பரவல் இல்லை என்ற தோற்றப்பாட்டில் தான் அரசாங்கத்தின் தலைவர் முதல் சிறிய தலைவர்கள் வரை நடந்து கொள்கின்றனர்.
ஜனாதிபதி கிராமத்துடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் எத்தகைய சுகாதார நடைமுறைகளுக்கும் பாரியளவில் முக்கியத்துவம் கொடுக்காது கலந்து கொண்டு வந்தார்.
சுகாதார தரப்பு அறிவிக்கும் சுகாதார ஒழுங்குகள் சாதாரண மக்களுக்கு மாத்திரம் தான் என்ற வண்ணம் அரசாங்க தரப்பினர் நடந்து கொள்கின்றனர்.
திருமண நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும் அரசாங்க தரப்பிலுள்ளவர்கள் திருமண நிகழ்வுகளில் பங்கேற்று புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றுகின்றனர்.
இவ்வாறான செயற்பாடுகளில் சாதாரண மக்கள் பங்கேற்றால் இராணுவத்தினரை பயன்படுத்தி அடக்கு முறையைப் பிரயோகிக்கின்றனர்.
ஒரு சட்டம் இரு விதமாக செயற்படுத்தப்படுகிறது. இது நாட்டு மக்களின் உயிர்களோடு விளையாடும் செயற்பாடாகும்.
கொரோனா ஏற்பட்ட ஆரம்ப நாட்களிலிருந்து விஞ்ஞானபூர்வ முடிவுகள் நடைமுறைகள் குறித்து கவனத்திற் கொள்ளாது மூட நம்பிக்கைகளின் பக்கம் சென்றனர். பல பாணிகளின் பக்கம் சென்றனர். விஞ்ஞான நடைமுறைகளை புறக்கணித்தனர். இன்றைய நிலைக்கு அரசாங்கத்தின் மூடநம்பிக்கை தீர்வுகள் தான் காரணம் என்றார்.