கடமைகளைப் பொறுப்பேற்றார் மட்டக்களப்பு புதிய அரச அதிபர்!
மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக கலாமதி பத்மராஜா இன்று காலை 10 மணியளவில் தனது கடமைகளை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பெறுப்பேற்றார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்ட செயலாளராக இருந்த கலாமதி பத்மராஜா அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இடமாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில் மீண்டும் இன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
துணிகரமாக செயலாற்றியவர்
2020 ஆம் ஆண்டு மாதவனை மயிலத்தமடு பகுதிகளில் இடம்பெற்ற மேய்ச்சல் தரை விவகாரங்களில் மிகவும் துணிகரமாக தனது செயற்பாடுகளை மேற்கொண்டதன் காரணமாக இவர் கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளராக இடமாற்றம் பெற்றுச் சென்றதை அடுத்து மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கணபதிப்பிள்ளை கருணாகரன் நியமிக்கப்பட்டிருந்தார்.
கடந்த சில வாரங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்க அதிபர் பிரச்சினை இழுபறியாக இருந்த நிலையில் நேற்றைய தினம் பிரதமர் முன்னிலையில் நியமனம் பெற்றுகொண்டார்.
ஊடகவியலாளர்கள் கோரிக்கை
இதன்போது புதிய அரசாங்க அதிபருக்கு மாவட்ட செயலக அதிகாரிகள் வாழ்த்துக்கள் தெரிவித்ததுடன் மட்டக்களப்பு மாவட்ட முழுநேர ஊடகவியலாளர் சார்பாக, மாவட்டத்தில் இடம்பெறும் பல அதிகார துஷ்பிரயோகங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் தொடர்ச்சியாக துணிச்சல் மிக்க ஒரு மாவட்ட செயலாளராக கடமையை துணிகரமாக செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
![Gallery](https://cdn.ibcstack.com/article/e4f4994f-b333-42d6-baac-bd9f65ac1a30/23-63c795eba55b3.webp)
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)