இந்திய வெளிவிவகார அமைச்சர் சிறிலங்கா விஜயம்!
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சிறிலங்கா விஜயம் செய்யவுள்ளார்.
இவர் இம்மாதம் 28 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதிகளில் சிறிலங்கா விஜயம் மேற்கொள்ள உள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் அழைப்பின் பேரில் இந்திய வெளிவிவகார அமைச்சர் இந்த விஜயத்தினை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் இந்த விஜயத்தின் போது, கொழும்பில் நடைபெறும் பிம்ஸ்டெக் (BIMSTEC) அமைச்சர்கள் மாநாட்டிலும் பங்கேற்கவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை விஜயத்துக்கு முன்னதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எதிர்வரும் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் மாலைத்தீவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி பிம்ஸ்டெக் மாநாடு கொழும்பில் 28 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு அமைச்சர்கள் இலங்கைக்கு செல்லவுள்ளதுடன் மியன்மாரின் வெளிவிவகார அமைச்சர் இந்த மாநாட்டில் இணைய வழியாகப் பங்கேற்கவுள்ளார்.
பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் தலைவர்களின் மெய்நிகர் பங்கேற்புடன் 30 ஆம் திகதி 5வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டிற்கு சிறிலங்கா அரச தலைவர் தலைமை தாங்கவுள்ளார்.
உச்சிமாநாடு மற்றும் தொடர்ச்சியான கூட்டங்களின் போது, பிராந்தியக் குழுவாக பிம்ஸ்டெக் அடைந்து கொண்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து பிரதிநிதிகள் கலந்துரையாடவுள்ளனர். இந்த உச்சிமாநாட்டின் போது, பிம்ஸ்டெக் சாசனம் ஏற்கப்பட்டு, பல சட்ட ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் என மேலும் எதிர்பார்க்கப்படுகின்றது.