இலங்கை போர்க்குற்றவாளிகளுக்கு தடைகோரும் பிரித்தானிய அரசியல் பிரபலங்கள்
பிரித்தானியாவில் தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட அரசியல் மற்றும் இராணுவ முகங்களுக்கு தடைகள் விதிக்கப்படுமென லிப்டெம் எனப்படும் தாராளவாத ஜனநாயக் கட்சியின் தலைவர் எட் டேவி உறுதியளித்துள்ளார்.
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் மண்டபம் நிறைந்த வகையில் நேற்றிரவு(16) இடம்பெற்ற தை மரபுரிமைத் திங்கள் மற்றும் பொங்கல் விழா நிகழ்வில் உரையாற்றிபோது அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.
போர்க்குற்றவாளிகளுக்கு தடை
இந்த நிகழ்வில் உரையாற்றிய ஏனைய கட்சிகளின் பிரமுகர்களும் தமிழ் மக்களை பெருமைப்படுத்தும் வகையில் கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.
புலம்பெயர் ஈழத் தமிழ் மக்களால் தற்போது உலகளாவிய ரீதியில் தைத்திருநாள் பண்டிகை முன்னெப்போதும் இல்லாத வகையில் பெருமைப்படுத்தப்படும் நிலையில் நேற்று பிரித்தானிய நாடாளுமன்றத்திலும் பொங்கல் பண்டிகை தனக்குரிய மதிப்பை பெற்றிருந்தது.
வெஸ்ற்மினிஸ்ரர் வளாகத்தில் நேற்றுமாலை 6 மணிமுதல் இரவுவரை இடம்பெற்ற இந்தநிகழ்வில் பிரித்தானியாவில் உள்ள முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் பங்கெடுத்து உரையாற்றியிருந்தனர்.
தமிழ்மக்களுக்கு நன்றி
இந்த நிகழ்வில் ஆளும்கென்சவேட்டிவ் கட்சியின் தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான நடின்சகாவியும் பங்கெடுத்திருந்தார்.
அவர் தனது உரையில் பிரித்தானியாவில் வாழும் தமிழ்மக்கள் பிரித்தானியாவுக்கு ஆற்றும்சேவைகளுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.
இதேபோல், தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்ற குழுவின் தலைவரான எலியட் கோல்பன் தனது உரையில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு நீதி கிட்டும் வகையில் பிரித்தானிய கட்சிகள் செயற்படும் என்ற உறுதிமொழியை வழங்கியிருந்தார்.
இலங்கையில் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட அரசியல் மற்றும் இராணுவ முகங்களுக்கு அண்மையில் கனடா தடைவிதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.