குரல் தளர்ந்த தாயின் மிகக் கனமான ஒரு கேள்வி
இந்தக் காட்சி மனதை உருக்கும் ஒரு செய்தி மட்டுமல்ல. இது இந்த நாட்டின் மனசாட்சியையே கேள்விக்குள்ளாக்கும் ஒரு மௌனக் கூச்சல்.
கிளிநொச்சியில் இப்போது நடைபெறும் சுதந்திர தின எதிர்ப்பு போராட்டத்தில், கையில் தனது மகனின் புகைப்படத்தைப் பிடித்துக்கொண்டு நிற்கும் இந்த வயதான தாய்மார்கள், 2009க்கு முன்னர் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை நினைத்து நீதியை வேண்டி நிற்கும் நிலை தமிழர் மீதான அடக்குமுறை அவலத்தின் அடையாளம் அவள் ஒரு தனி மனிதர் அல்ல.
அவள் ஆயிரக்கணக்கான தாய்களின் பிரதிநிதி.
காலம் கடந்து போய்விட்டது, தலைமுறைகள் மாறிவிட்டன என்று சொல்லப்படும் இந்த நாட்டில், அவளது கண்ணீருக்கு இன்னும் காலாவதி இல்லை.
யுத்தம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்தத் தாய்க்கு யுத்தம் முடிவடையவே இல்லை. அவளது மகன் திரும்பி வராத அந்த நாளிலிருந்து, ஒவ்வொரு விடியலும் ஒரு புதிய போர்தான்.
என் மகன் எங்கே
அரசியல் மாறியது, ஆட்சி மாறியது, வாக்குறுதிகள் மாறின. ஆனால் “என் மகன் எங்கே?” என்ற கேள்விக்கான பதில் மட்டும் ஒருபோதும் மாறவில்லை. அது இன்னும் இல்லை.
கையில் அவள் பிடித்துள்ள புகைப்படம் ஒரு காகிதம் அல்ல. அது அவளது நினைவுகளின் சாட்சியம். அது அவளது இழப்பின் ஆதாரம்.
இந்த நாட்டின் நீதித் தோல்வியின் சின்னம் என்றும் இதனை வகைப்படுத்தலாம்.
அந்தப் புகைப்படத்தை அவள் இன்னும் பாதுகாத்து வைத்திருக்கிறாள் என்றால், அது அவளது மகன் உயிருடன் இருப்பான் என்ற நம்பிக்கையால் மட்டுமல்ல. இந்த நாட்டில் எங்கோ ஒரு நாள் நீதியும் உயிருடன் இருக்கும் என்ற நம்பிக்கையாலும்தான்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து பேசும்போது, எண்களாக மாற்றுவதில் நாம் பழகிவிட்டோம். ஆயிரக்கணக்கில், “பட்டியலில், வழக்குகளில் என்று சொல்கிறோம். ஆனால் ஒவ்வொரு எண்ணுக்கும் பின்னால் ஒரு தாய் இருக்கிறாள். ஒரு குடும்பம் இருக்கிறது. ஒரு நிறுத்தப்பட்ட வாழ்க்கை இருக்கிறது.
நடுக்கம் நிறைந்த கைகள்
அந்த வயதான தாயின் நடுக்கம் நிறைந்த கைகள், எங்களுக்குச் சொல்லும் செய்தி ஒன்றே நீதி இன்னும் வரவில்லை. இந்தப் போராட்டங்கள் அரசுக்கு எதிரானவை என்று மட்டும் பார்க்கப்படக் கூடாது.
இவை மனிதத்தன்மைக்கு ஆதரவான போராட்டங்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உண்மையை வெளிக்கொணராமல், பொறுப்பேற்பு இல்லாமல், நல்லிணக்கம் பேசுவது வெறும் வெற்று வார்த்தைகளாகவே இருக்கும்.
நினைவுகளை மறக்கச் சொல்லி அமைதியை கட்டாயப்படுத்த முடியாது. அந்தத் தாயின் புகைப்படம் நம்மை கலங்க வைத்தது. ஏன் என்றால், அது நம்முடைய கூட்டு தோல்வியை நமக்கு நேராகக் காட்டுகிறது.
அவள் இன்னும் காத்திருக்கிறாள். குரல் தளர்ந்தாலும், நம்பிக்கை முறிந்தாலும், அவள் நின்றுகொண்டிருக்கிறாள். அவள் கேட்பது பெரிய அரசியல் தீர்வு அல்ல.
ஒரே ஒரு எளிய, ஆனால் மிகக் கனமான கேள்வி... “என் மகனுக்கு என்ன நடந்தது?” அந்தக் கேள்விக்கு பதில் சொல்லும் வரை, இந்த நாட்டில் எந்த யுத்தமும் உண்மையில் முடிந்ததாகக் கூற முடியாது.



| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |