தமிழ் பேசும் கட்சிகளின் ஒற்றுமைக்கு மைத்திரி தரப்பு எதிர்ப்பு
அரசியல் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக தமிழ் பேசும் கட்சிகளின் ஒன்றிணைந்த முயற்சிகளுக்கு எதிராக ஆளும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியொன்று கருத்து வெளியிட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்க வேண்டும் என்ற தமிழ் அரசியல் கட்சிகளின் கோரிக்கைக்கு, முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஆதரவளிக்கக் கூடாது என சிறிலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் பைசர் முஸ்தபா (Faizer Mustafa) தனது இல்லத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தியதோடு, தமிழ் பேசும் கட்சிகளின் சந்திப்பு குறித்தும் கருத்து வெளியிட்டுள்ளார்.
தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து தீர்மானங்களை மேற்கொள்வது மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை விட சுமந்திரன், சாணக்கியன் போன்ற தமிழ் உறுப்பினர்களும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசுவதை தான் பாராட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும், வடக்கு, கிழக்கை இணைப்பதற்கான ஆதரவை தமிழ் கட்சிகள் கோரினாலும் அதற்கு இடமளிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் பேசும் கட்சிகளின் சந்திப்பின் பின்னர் உருவாக்கப்பட்ட ஆவணத்தில் வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளதால் முஸ்லிம் கட்சிகள் கையெழுத்திட மறுத்துவிட்டதாக தனக்கு தகவல் கிடைத்ததாக பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தை விட ஏனைய மாகாணங்களில் சிங்களவர்களுடன் முஸ்லிம்கள் இணைந்து வாழ்வதாகவும், வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் அதிகம் என்பதோடு, மலையக மக்களின் அரசியல் போக்கு என்பது வேறு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் அரசியல் கட்சிகள் எத்தகைய தீர்மானங்களை எடுத்தாலும், ஏனைய மாகாணங்களில் வாழும் முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அவை மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் கூறியுள்ளார்.
எந்தவொரு அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் அமைச்சுப் பதவிகளைப் பெற்று முஸ்லிம் மக்களின் தேவைகளை கருத்திற் கொண்டு அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், எனினும் அப்படி எதுவும் நடக்கவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
முஸ்லிம்நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்களின் நன்மையை மாத்திரமே கருத்திற்கொண்டு செயற்படுவதாகவும், இதற்கமைய 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு முஸ்லிம் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்ததாகவும் பைசர் முஸ்தபா மேலும் தெரிவித்துள்ளார்.