ஆசிரியர் உயிரிழப்பு : தலவாக்கலை பகுதியில் அமைதியின்மை!
தலவாக்கலை பிள்ளையார் ஆலய பகுதியில் அமைந்துள்ள மரத்தை இன்று அகற்றும் சந்தர்ப்பத்தில், மரம் வீழ்ந்து, தேசிய பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதனால் நுவரெலியா பிரதான வீதியின் தலவாக்கலை பகுதியில் இன்று மாலை அமைதியின்மை ஏற்பட்டது.
இந்த சம்பவம் இன்று பிற்பகல் 5 மணி அளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
தலவாக்கலை தமிழ் வித்தியாலயத்தில் பணிபுரியும் 2 பிள்ளைகளின் தந்தையான வேலுசாமி மகேஸ்வரன் (வயது 39) என்பவரே உயிரிழந்துள்ளார்.
200 வருடம் பழைமை வாய்ந்த மரத்தினை வெட்டுவதற்கு அனுமதி கொடுத்தது யார்? என கோரி, பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர்.
சம்பவத்தில் உயிரிழந்த ஆசிரியரின் சடலம் லிந்துலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.



