ஈஸ்டர் தாக்குதலின் முதல் தீர்ப்புக்கு முன்னர் பூஜித் கடத்திய 7 வருடங்கள்
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறன்று முஸ்லிம் தீவிரவாதக் குழுவொன்று மேற்கொண்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக முன்கூட்டியே புலனாய்வு எச்சரிக்கைகள் கிடைத்திருந்த போதிலும், அந்தத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்கு யார் பொறுப்பேற்க வேண்டும் என்ற கேள்வி நீண்டகாலமாக விவாதப் பொருளாக இருந்து வந்தது.
நாட்டின் சட்டம், ஒழுங்கு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்குப் பிரதான பொறுப்பேற்றிருந்த அப்போதைய காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தாக்குதலைத் தடுக்க என்ன நடவடிக்கைகளை எடுத்தார் என்பது இந்த விவகாரத்தின் முக்கிய அம்சமாகும்.
பூஜித் ஜயசுந்தர் யார்
பூஜித ஜயசுந்தர 1985 ஆம் ஆண்டு உதவி காவல்துறை அத்தியட்சகர் (ASP) ஆக இலங்கை காவல்துறை இணைந்தார்.
அதன் பின்னர், 1991 – காவல்துறை அத்தியட்சகர் (SP)
1996 – சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்(SSP)
2005 – பிரதிப் காவல்துறை மா அதிபர் (DIG)
2010 – சிரேஷ்ட பிரதிப் காவல்துறை அதிபர் (SDIG) என பல்வேறு பதவிகளில் பணியாற்றினார்.
2016 ஏப்ரல் 20 ஆம் திகதி, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசியலமைப்புச் சபையின் அனுமதியுடன் பூஜித் ஜயசுந்தரவை காவல்துறைமா அதிபராக நியமித்தார்.
முன்னாள் காவல்துறை அதிபர் என்.கே. இளங்ககோன் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்காக எஸ்.எம். விக்ரமசிங்க, பூஜித் ஜயசுந்தர மற்றும் சந்தன விக்ரமரத்ன ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.
அரசியல் பின்னணி 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தேசிய அரசின் கீழ் காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் கட்டுப்பாட்டில் செயல்பட்டது.
காவல்துறை மா அதிபர் மீது விமர்சனங்கள்
ஆனால் 2018 ஒக்டோபர் 26 அன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்த அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து, காவல்துறை ஜனாதிபதியின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.
பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும், உச்ச நீதிமன்றம் அந்த நடவடிக்கையை அரசியலமைப்புக்கு முரணானது என அறிவித்தது.
அதன் பின்னர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவியேற்றாலும், காவல்துறை தொடர்ந்து ஜனாதிபதியின் கீழேயே இயங்கியது.
இது குறித்து ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, "காவல்துறை அதிபரை மட்டும் பதவியில் இருந்து நீக்குவதால் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது. இதற்கு அவரைவிட உயர்ந்த மட்டத்தில் உள்ளவர்களும் பொறுப்புக்கூற வேண்டும்" என்று தெரிவித்தார்.
காவல்துறை மா அதிபர் மீது விமர்சனங்கள் இருந்தாலும், முழுப் பொறுப்பையும் அவர் மீது மட்டும் சுமத்துவது நியாயமல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஈஸ்டர் தாக்குதலுக்கு எட்டு நாட்களுக்குப் பின்னர், 2019 ஏப்ரல் 29 அன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனின் உத்தரவின் பேரில் பூஜித ஜயசுந்தர கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, தம்மை கட்டாய விடுப்பில் அனுப்ப ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்றும், அந்த முடிவு சட்டவிரோதமானது என்றும் தெரிவித்து, 2019 மே 29 அன்று அவர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்தார்.
2019 ஜூன் 6 அன்று, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பூஜித ஜயசுந்தர சாட்சியம் வழங்கினார்.
2018 அக்டோபர் 23 ஆம் திகதி நடைபெற்ற தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டத்திற்குப் பிறகு நடைபெற்ற அடுத்தடுத்த கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டாம் என்று ஜனாதிபதி தெரிவித்ததாகவும், அந்த தகவலை அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்தியரத்ன தமக்கு அறிவித்ததாகவும் அவர் கூறினார்.
கட்டாய விடுப்பு
மேலும், கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவதற்கு முன்பு பதவி விலகுமாறு ஜனாதிபதி தம்மிடம் கோரியதாகவும் அவர் தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டங்களில் இருந்து தாம் விலக்கப்பட்ட நிலையில், ஈஸ்டர் தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்கான முழுப் பொறுப்பையும் தமக்கு மட்டும் சுமத்துவது எவ்வளவு நியாயம் என அவர் கேள்வி எழுப்பினார்.
ஜனாதிபதியின் நிலைப்பாடு இதற்கிடையில், அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான முன்னறிவிப்பு புலனாய்வுத் தகவல்கள் தமக்கு கிடைக்கவில்லை என்ற நிலைப்பாட்டை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார்.
இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் ஹெமசிரி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுப்பில் இருந்த காவல்துறைத் தலைவர் புஜித் ஜெயசுந்தர ஆகியோர் ஜூலை 2, 2019 அன்று கைது செய்யப்பட்டனர்.
தாக்குதல் குறித்த எச்சரிக்கைகள் பற்றி அறிந்திருந்ததை இருவரும் ஒப்புக்கொண்டதோடு ஆனால் அவர்கள் பொறுப்பை ஏற்க மறுப்பதை அடுத்து இந்த நடவடிக்கை அப்போது மேற்கொள்ளப்பட்டது.
2019 ஜூலை 9 ஆம் திகதி, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுப்பில் இருந்த காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
பொதுமக்களின் உயிரைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பை நிறைவேற்றத் தவறியதாகக் கூறி, குற்றவியல் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இருவரும் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் நீண்டகாலம் நீதிமன்றத்தில் இடம்பெற்றன. இதற்கிடையில், ஈஸ்டர் தாக்குதலின் பின்னணி மற்றும் அதனைத் தடுக்கத் தவறியமை தொடர்பில் விசாரணை நடத்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு (Presidential Commission of Inquiry – PCoI) நியமிக்கப்பட்டது.
அந்த ஆணைக்குழுவின் முன்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பாதுகாப்பு அதிகாரிகள், புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மற்றும் பலர் சாட்சியம் வழங்கினர்.
ஆணைக்குழுவின் விசாரணைகளில், இந்திய புலனாய்வுப் பிரிவிலிருந்து பல கட்டங்களாக தாக்குதல் தொடர்பான எச்சரிக்கைகள் இலங்கைக்கு கிடைத்திருந்ததாகவும், அவை பாதுகாப்பு அமைப்புகளுக்குள் பரிமாறப்பட்டிருந்த போதிலும், அவற்றை ஒருங்கிணைத்து உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் கடுமையான குறைபாடுகள் இருந்ததாகவும் தெரியவந்தது.
பொதுமக்களின் பாதுகாப்புக்கான பொறுப்பு
அதேவேளை, தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டங்களில் இருந்து தாம் விலக்கப்பட்டிருந்ததாக பூஜித ஜயசுந்தர முன்வைத்த வாதமும் விசாரணைகளின் போது விரிவாக ஆராயப்பட்டது. எனினும், காவல்துறை மா அதிபராக நாட்டின் சட்டம், ஒழுங்கு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்கான பொறுப்பு அவரிடமும் தொடர்ந்திருந்ததாக பல தரப்பினர் சுட்டிக்காட்டினர்.
2021 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில், ஈஸ்டர் தாக்குதலைத் தடுக்கத் தவறியமை தொடர்பில் பல உயர்மட்ட அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் எனக் குறிப்பிடப்பட்டது.
அந்தப் பட்டியலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர உள்ளிட்டோரின் செயற்பாடுகள் குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதுடன், அவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 அன்று, கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றம், முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை பாதுகாப்பு தரப்பை அழைக்காமலேயே விடுவித்தது.
இந்தத் தீர்ப்பு சட்டத்திற்கு முரணானது என வாதிட்ட சட்டமா அதிபர், உயர நீதிமன்றத்தில் மேன்முறையீடு தாக்கல் செய்தார். அந்த மேன்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் பாதுகாப்பு தரப்பு சாட்சியங்களை பதிவு செய்யாமல் வழக்கை முடித்தது சட்டப்பிழை எனத் தீர்மானித்தது.
அதனைத் தொடர்ந்து, வழக்கை மீள விசாரிக்குமாறு உத்தரவிடப்பட்டதுடன், கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை ஆரம்பிக்கப்பட்டது. இந்த மறுவிசாரணையின் போது, சட்டமா அதிபர் சார்பில் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு எதிராக 855 குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய குற்றப்பத்திரிகை முன்வைக்கப்பட்டது.
ஈஸ்டர் தாக்குதல் நடைபெறவிருந்ததாக முன்கூட்டியே கிடைத்த புலனாய்வுத் தகவல்களை அறிந்திருந்தும், தனது சட்டபூர்வ கடமைகளை நிறைவேற்றத் தவறியதாகவும், அதனால் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகளுக்கும் காயங்களுக்கும் காரணமான அலட்சியத்தைக் காட்டியதாகவும் குற்றப்பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டது.
பல ஆண்டுகள் நீடித்த விசாரணைகள், சாட்சியங்கள் மற்றும் இரு தரப்பினரின் வாய்மொழி மற்றும் எழுத்துமூல வாதங்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, 2026 ஜூலை 31 அன்று கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியது.
அந்தத் தீர்ப்பில், முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர குற்றவாளி என நீதிமன்றத்தின் பெரும்பான்மை நீதிபதிகள் தீர்மானித்தனர். ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியமை, தனது அரசுப் பொறுப்பை கடுமையாகப் புறக்கணித்தமை மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கான சட்டப்பூர்வ பொறுப்பு ஆகியவற்றின் அடிப்படையில், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பு, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக குற்றவியல் வழக்கில் வழங்கப்பட்ட மிக முக்கியமான நீதித் தீர்ப்பாகப் பதிவாகியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |