நீதிபதியை அறையில் பூட்டிவைத்து காரை கொள்ளையிட்டவர் சிக்கினார்
நீதிபதியின் வீட்டிலேயே அவரை அறையொன்றில் பூட்டிவைத்துவிட்டு வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை கொள்ளையிட்டுச் சென்றவர் காவல்துறையின் தந்திரோபாயமான செயற்பாட்டால் சிக்கினார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குளியாப்பிட்டிய மேலதிக மாவட்ட நீதிபதி அமில சம்பத் ஆரியசேன பிலியந்தனை மடபாத்த பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டை வாடகைக்கு விடவுள்ளதாக ஊடகமொன்றில் விளம்பரம் செய்திருந்தார். இந்த விளம்பரத்தை பார்வையிட்ட கொள்ளையன் வீட்டை வாடகைக்கு பெறுவதுபோல் பாசாங்கு செய்து நீதிபதியை குறித்த வீட்டிற்கு வரவழைத்துள்ளான்.
சொகுசு கார் திருட்டு

இதன்போது வீட்டின் மேல்மாடியில் அறையொன்றில் திடீரென நீதிபதியை பூட்டிவிட்டு வீட்டின் கீழ் நின்ற 6 மில்லியன் பெறுமதியான சொகுசு காரை திருடி சென்றுள்ளார்.
பின்னர் மேலதிக நீதிபதியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சந்தேகநபர், கார் மற்றும் காரில் உள்ள ஆவணங்களை ஒப்படைக்க 5 இலட்சம் ரூபாய் வழங்குமாறு கப்பமாக கோரியுள்ளார்.
அழைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட கையடக்க தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து சந்தேகநபர் வத்தளை ஒலியமுல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறையின் நடிப்பு

நீதிபதியின் சகோதரன் போல் நடித்த காவல்துறை உத்தியோகத்தர், நீதிபதி அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காரை திருப்பி கொடுப்பதற்கு பணம் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, 27 வயதுடைய சந்தேக நபரை வத்தளை பிரதேசத்துக்கு அழைத்து அவரை கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.