தேனிசை செல்லப்பாவின் மறைவுக்கு விடுதலைப் புலிகளின் அரசியல் துறை இரங்கல்
தமிழ் மக்களின் உரிமைக்காகவும் நீதிக்காகவும் ஒயாது ஒலித்த தேனிசை செல்லப்பாவின் மாபெரும் விடுதலைக் குரல் ஒய்ந்துவிட்டது என தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனிசை செல்லப்பாவின் மறைவு குறித்து தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தமிழ் மக்களின் உரிமைக்காகவும் நீதிக்காகவும் ஒயாது ஒலித்த மாபெரும் விடுதலைக் குரல் ஒய்ந்துவிட்டது. தமிழ் மக்களின் விடிவையும் தமிழீழ மண்ணின் விடுதலையையும் தனது வாழ்வின் உன்னத இலட்சியமாகக் கொண்டு, அந்த உயரிய நோக்கிற்காக இறுதி வரை வாழ்ந்தவர் தேனிசை செல்லப்பா.
தமிழீழத்தின் துயரங்கள்
தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் சிங்கிலிப்பட்டி என்ற கிராமத்தில் 21.04.1941 அன்று பிறந்த அவர், தனது 85வது வயதில் 28.04.2026 அன்று இயற்கை எய்தினார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் பேபி சுப்பிரமணியம் (இளங்குமரன்) அவர்களின் மூலம் 1982ஆம் ஆண்டு காலப்பகுதியில் தேனிசை செல்லப்பா அவர்கள் அறிமுகமானார்.
அதன் தொடர்ச்சியாக தமிழீழ தேசியத் தலைவர் வே. பிரபாகரனை சென்னை மயிலாப்பூரில் உள்ள நாகேஸ்வரராவ் பூங்காவில் நேரில் சந்தித்து கலந்துரையாட ஏற்பாடு செய்தார்.
அந்தச் சந்திப்புக்குப் பின்னர், தமிழீழத்தின் துயரங்களையும் விடுதலையின் அவசியத்தையும் தனது எழுச்சிகரமான குரல் மற்றும் பாடல்களின் மூலம் மக்களிடையே எடுத்துரைத்து அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
1990ஆம் ஆண்டு, தேனிசை செல்லப்பா அவர்களின் தலைமையில் இசைக்குழுவினர் ஈழத்துக்கு அழைக்கப்பட்டனர்.
யாழ்ப்பாணம் முற்றவெளியில் பல இலட்சம் மக்களின் முன்னிலையில் அவரது இசைக்கச்சேரி நடைபெற்றது.
ஆழ்ந்த பற்று
தேசியத் தலைவரின் பணிப்பின் படி “உலகத் தமிழினமே எண்ணிப் பார், நீ உறங்கினால் வரலாற்றில் யார் உன்னை மன்னிப்பார்” என்ற பாடலுடன் தொடங்கி, “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும், நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்” என்ற பாடலுடன் நிறைவடைந்தது.
இவ்வாறான நிகழ்ச்சிகள் தமிழீழத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றன. தாயகத்தில் தமிழீழ தேசியத் தலைவரை இரண்டு தடவைகள் சந்தித்த அவர், “பாசறைப் பாணர்” என தேசியத் தலைவரால் கௌரவிக்கப்பட்டார்.
தேசியத் தலைவர் மீது ஆழ்ந்த பற்றுடன் இருந்த அவர், தமிழ்நாட்டில் ஈழ விடுதலை ஆதரவாளர்கள் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த போதிலும், பல தடைகளைத் தாண்டி தமிழீழ ஆதரவு எழுச்சி பயணத்தைத் தொடர்ந்து முன்னெடுத்தார்.
தமிழீழ எழுச்சிப் பாடல்களை மட்டுமே பாடுவேன் என்ற உறுதியால் சில வாய்ப்புகளை இழந்திருந்தாலும், தனது இசைத்திறனை தொழிலாகப் பயன்படுத்தாமல் இனத்தின் விடுதலைக்கான குரலாக ஒலித்தார்.
அவரது நூற்றுக்கணக்கான பாடல்கள் என்றும் உயிர்ப்புடன் நிலைத்து நிற்கும். தமிழீழத்தின் வலியும் தமிழினத்தின் கனவும் அவரது குரலால் உயிர் பெற்றன.
அவரது உடல் மண்ணில் கலந்தாலும், அவரது குரல் மௌனமாகாது; அது தலைமுறைகளைத் தாண்டி ஒலித்துக் கொண்டே இருக்கும். அவரது மறைவு ஒரு மனிதனின் இழப்பு மட்டுமல்ல, ஒரு வரலாற்றின் அடையாள இழப்பாகும்.
நீங்காத நினைவுகளாக எம்முடன் ஒன்றியுள்ள தேனிசை செல்லப்பா அவர்களின் தியாகத்தை மதிப்பளிக்கும் வகையில் “தமிழீழத்தின் பாசறைப் பாணர்” என்ற தேசிய விருது தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறையால் வழங்கப்பட்டுள்ளது.
“சத்திய இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களை சாவு என்றும் அழித்து விடாது; அவர்கள் சரித்திர நாயகர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் வாழ்வார்கள்” என்ற தேசியத் தலைவரின் சிந்தனைக்கு ஏற்ப, தமிழர் நினைவுகளில் “தமிழீழத்தின் பாசறைப் பாணர்” என்றும் வாழ்வார்.
அவருக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறையினராகிய நாம் வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் பிள்ளைகள், குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் துயரில் நாமும் பங்கு கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |