எரிபொருள் விலை உயர்வு - முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிக்க கோரிக்கை
எரிபொருள் விலை உயர்வு காரணமாக முச்சக்கர வண்டிக் கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியம் உள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த விடயத்தை சங்கத்தின் பொதுச் செயலாளர் எல். ரோஹன பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
பெட்ரோல் விலை ரூ. 12 அதிகரித்துள்ளதால், தற்போதைய கட்டண அமைப்பை திருத்தியமைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்
அதன்படி, இரண்டாவது கிலோமீட்டருக்கான தற்போதைய ரூ. 90 கட்டணத்தை ரூ. 10 உயர்த்தி ரூ. 100 ஆக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது, முதல் கிலோமீட்டருக்கான கட்டணம் ரூ. 100 ஆகவும், இரண்டாவது கிலோமீட்டருக்கான கட்டணம் ரூ. 90 ஆகவும் உள்ள நிலையில், எரிபொருள் விலை உயர்வை கருத்தில் கொண்டு இந்த திருத்தம் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், முச்சக்கர வண்டிக் கட்டணத்தை நிர்ணயிக்கும் மேற்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து திணைக்களம் இதனை விரைவில் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கு மேலாக, எரிபொருள் கட்டுப்பாடுகள் காரணமாக முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் தங்கள் வாழ்வாதாரத்தில் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும், அவர்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |