நாட்டின் பல இடங்களில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டின் சப்ரகமுவ மாகாணத்திலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள இன்றைய (07.08.2026) நாளுக்கான வானிலை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
பலத்த காற்று வீசும்
வடமத்திய, சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் உள்ள கடற் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கி.மீ வரை அதிகரிக்க கூடிய வாய்ப்புள்ளது.
கடற்கொந்தளிப்பாகக் காணப்படும்
மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் உள்ள கடற் பிராந்தியங்கள் அவ்வப்போது கொந்தளிப்பாகவோ அல்லது மிகக் கொந்தளிப்பாகவோ காணப்படும்.

காங்கேசன்துறையில் இருந்து புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் உள்ள கடற் பிராந்தியங்கள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.
எனவே, இக்கடற் பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என கடற்படை மற்றும் கடற்றொழிலாளர் சமூகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |