இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு
குறுகிய கால விசாக்களில் இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கு சுய போக்குவரத்தை எளிதாக்குவதற்குத் தேவையான ஓட்டுநர் உரிமங்களை வழங்குவதற்கான அலுவலகம் நாளை (3) முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் திறக்கப்படும் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்தார்.
சுற்றுலாப் பயணிகள் தற்காலிக ஓட்டுநர் உரிமங்களைப் பெற்று தங்கள் இலக்கை நோக்கி பயணிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
நாளை முதல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடவடிக்கை
இதுவரை வேரஹெரவில் உள்ள மோட்டார் போக்குவரத்து ஆணையரக அலுவலகத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக நாளை முதல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்த நடவடிக்கைகளைத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வாகனங்களை வாடகைக்கு எடுத்து ஓடும் சுற்றுலாதாரிகள்
சுற்றுலாவுக்காக நாட்டிற்கு வரும் வெளிநாட்டினர் பெரும்பாலும் கட்டுநாயக்க விமான நிலையம் அல்லது அருகிலுள்ள இடங்களில் இருந்து வாகனங்களை வாடகைக்கு எடுத்து தாங்களாகவே ஓட்டுநர்களாகச் செயல்படுவதும், இதற்காக அவர்கள் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் மற்றும் இலகுரக வாகனங்களைப் பயன்படுத்துவதும் கவனிக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் குறிப்பிட்டார்.
புதிய முறையின் கீழ், வெளிநாட்டினருக்கு இலகுரக வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு மட்டுமே உரிமங்கள் வழங்கப்படும் என்றும், கனரக வாகனங்கள் அல்லது முச்சக்கர வண்டிகளுக்கு ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்படாது என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இன்று (2) குருநாகலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 4 நாட்கள் முன்
