சிறிலங்கா ஏர்லைன்ஸில் அடுத்தடுத்து இரண்டு மோசடிகள்! வெளியாகிய அதிர்ச்சி தகவல்
அண்மையில் ஊடகங்களில் வெளியான இரண்டு வெவ்வேறு நிதி மோசடிகள் தொடர்பான செய்திகள் குறித்து சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் உத்தியோகபூர்வமாக விளக்கமளித்துள்ளது.
அதன்படி, முதலாவது சம்பவத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் உள்ள சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சேவை வழங்குநர் ஒருவருக்குச் சேர வேண்டிய AED 974,000 (ஐக்கிய அரபு அமீரக திர்ஹம்) தொகை அந்த நிறுவனத்திற்குக் கிடைக்கப் பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணைகளின்படி, தேவையற்ற மூன்றாம் தரப்பு நபர் ஒருவர் அந்தச் சேவை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் கணக்கைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தி, அவர்களின் வங்கி கணக்கு விபரங்களையும் ஆவணங்களையும் மாற்றியமைத்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
போலி வங்கிக் கணக்கு
இதன் காரணமாக, மாற்றப்பட்ட போலி வங்கிக் கணக்கையே உண்மையான கணக்கு என நம்பி சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் பணத்தை அனுப்பியுள்ளது.

இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தவுடன், அந்த வங்கிக் கணக்கிற்கான அடுத்தடுத்த பரிவர்த்தனைகளை நிறுவனம் உடனடியாக நிறுத்தியுள்ளதுடன், இது குறித்து ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளிடமும், இலங்கையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடமும் (CID) முறையான முறைப்பாடுகளை அளித்து விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.
இதேவேளை, இந்தத் தவறு சேவை வழங்குநரின் மின்னஞ்சல் பாதுகாப்பு குறைபாட்டால் ஏற்பட்டுள்ளதால், இதற்குத் தங்களால் பொறுப்பேற்க முடியாது என்றும் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், இந்தியாவின் சென்னையில் உள்ள சிறிலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகத்தில் பணியாற்றிய நிதித்துறை ஊழியர்கள் சிலர், 22 மில்லியன் இந்திய ரூபாய் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்கள் தலைமறைவு
அங்கு பணிபுரிந்த இந்திய ஊழியர்கள் சிலர் போலி இன்வாய்ஸ்கள், போலி கட்டண விவரங்கள் மற்றும் போலிக் கையெழுத்துகளை உருவாக்கி இந்த மோசடியைச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் உள்ள தலைமை அலுவலகம் நடத்திய வழக்கமான கணக்காய்வின் போதே இந்த முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாக உள்நாட்டு விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேற்படி, விசாரணை தொடங்கப்பட்டதிலிருந்து சம்பந்தப்பட்ட ஊழியர்கள் பணிக்கு வருவதைத் தவிர்த்து தலைமறைவாகியுள்ளதகாவும் கூறப்படுகிறது.
தற்போதைய நிலையில் அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதோடு, இந்தியக் காவல் துறையிலும் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, இந்த மோசடியால் நிறுவனத்திற்கு ஏற்பட்ட நிதி இழப்பை முழுமையாக மீட்பதற்கான அனைத்து அவசியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |