ரஷ்ய படையெடுப்பில் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான குழந்தைகள்- கடத்தப்பட்ட ரயில்வே ஊழியர்கள்!
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடங்கியது முதல் இதுவரை 136 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் மரியுபோல் நகரில் 1000க்கும் மேற்பட்டோர் தஞ்சமடைந்திருந்த திரையரங்கில் ரஷ்யப் படைகள் குண்டுவீசித் தாக்கியதில் சுமார் 300 பேர் இறந்ததாக, நேரில் கண்ட சாட்சிகளை மேற்கோள் காட்டி உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, உக்ரைனுக்கு எதிரான போரில் செலவிட ரஷ்ய பட்ஜெட்டில் நிதி இல்லை என்று உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமை புலனாய்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
ரஷ்ய அரசு தங்கள் ராணுவத்திற்கு உறுதியளித்தபடி நிதியளிப்பதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாகவும், அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், உக்ரைனில் தனது இராணுவ நடவடிக்கையின் முதல் கட்டம் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
உக்ரைனில் ரஷ்யா படையெடுப்பு தொடங்கியதில் இருந்து 54 ரயில்வே ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 64 பேர் காயமடைந்துள்ளதாகவும், மூவர் ரஷ்யப் படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.