அமெரிக்காவிற்கு மீன் மற்றும் கடல் நண்டுகளை ஏற்றுமதி செய்ய இலங்கைக்கு அனுமதி
இலங்கையின் கடல் நண்டு ஏற்றுமதிக்கு அமெரிக்க அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ அனுமதி கிடைத்துள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவிற்கு கடல் சார் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சு அறிக்கையொன்றின் மூலம் குறித்த விடயத்தை அறிவித்துள்ளது.
மேலும், அமெரிக்காவின் கடல் பாலூட்டிகள் பாதுகாப்புச் சட்டத்தின் (Marine Mammal Protection Act) கீழ் விதிக்கப்பட்டிருந்த கடுமையான நிபந்தனைகளை இலங்கை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளது.
ஏற்றுமதிகள் தற்காலிகமாக பாதிப்பு
அதன்படி, அமெரிக்க வர்த்தகத் திணைக்களத்தின் கீழ் செயல்படும் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA), இலங்கையின் நண்டுப் பிடிப்பு நடைமுறைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒழுங்குமுறை அமைப்புகள் அமெரிக்க தரநிலைகளுக்கு இணங்க உள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது.

2025 நவம்பரில் அமெரிக்க நீதிமன்ற தீர்ப்பொன்றினால் இந்த ஏற்றுமதிகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டிருந்தன.
எனினும், தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (NARA) உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சமர்ப்பித்த அறிவியல் தரவுகள் மற்றும் உண்மை தகவல்களை ஆய்வு செய்த பின்னரே NOAA இந்த ஒப்புதலை வழங்கியுள்ளது.
இதன் மூலம், அமெரிக்காவிற்கு மீன் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்குத் தேவையான ஒப்பீட்டுத் தகுதி மதிப்பீட்டை (Comparability Finding) இலங்கை பெற்றுள்ளதோடு, இந்த அனுமதி 2029 டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும்.
கடற்றொழில் முறைகள்
கடல் நண்டுகள் உள்ளிட்ட இலங்கையின் கடல் சார் உணவுப் பொருட்கள் பொருட்களின் ஏற்றுமதி அமெரிக்காவிற்கு தடையின்றி மேற்கொள்ள முடியும்.

மேலும், டொல்பின்கள் மற்றும் திமிங்கிலங்கள் போன்ற கடல் பாலூட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த கடற்றொழில் முறைகள் இலங்கையில் பின்பற்றப்படுகின்றமை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்த முன்னேற்றம், நாட்டின் கடற்றொழில் சமூகத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதோடு, அந்நியச் செலாவணி வருவாயை அதிகரிக்கவும் முக்கிய பங்காற்றும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |