கனடாவிற்குச் செல்வோருக்கு அமெரிக்கா விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!
கனடாவிற்குச் செல்வோருக்கு அவசர எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் முதன்மை பொது சுகாதார அமைப்பான சிடிசி (CDC) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கனடாவின் மேனிடோபா (Manitoba) மாகாணத்தில் ஹெபடைடிஸ் ஏ (Hepatitis A) என்னும் கல்லீரல் அழற்சி நோய் வேகமாகப் பரவி வருவதை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நோய் பரவல்
இதனடிப்படையில் தீவிரமாகப் பரவக்கூடிய இந்தத் தொற்று குறித்துப் பயணிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேனிடோபா மாகாணத்தில் 2025 ஏப்ரல் மாதம் தொடங்கிய இந்த நோய் பரவல் தற்போதும் தொடர்ந்து வருகின்றது.
இந்நிலையில் 784 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 186 வழக்குகள் பதிவாகியுள்ளன.
வைரஸ் தொற்று
அத்தோடு 165 பேர் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வைரஸ் தொற்று பொதுவாக மல-வாய்வழிப் பாதை (fecal-oral route) மூலமாகவே பரவுவதுடன் கைகளைச் சரியாகக் கழுவாமல் இருப்பது அசுத்தமான உணவு மற்றும் நீர் ஆகியவற்றால் எளிதில் தொற்றுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகுதியுடையவர்கள் அனைவரும் ஹெபடைடிஸ் ஏ தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் எனவும் கழிவறையைப் பயன்படுத்திய பிறகும் உணவுக்கு முன்பும் கைகளைச் சோப்புப் போட்டு நன்றாகக் கழுவ வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காய்ச்சல், பசியின்மை, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் அடர் நிறத்தில் சிறுநீர் கழித்தல் ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறு பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |