தகமைபாராது சேவைக்கால அடிப்படையில் நியமனம் வழங்குமாறு சுகாதாரதொண்டர்கள் ஆர்ப்பாட்டம்!
தகமைபாராது சேவைக்கால அடிப்படையில் நியமனம் வழங்குமாறு கோரி சுகாதாரத்தொண்டர்களால் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக காலை 9.30 மணிக்கு குறித்த ஆர்பாட்டம் இடம்பெற்றிருந்தது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
நாம் கடந்த சில வருடங்களுக்கு மேலாக எதுவித வேதனமும் இன்றி சுகாதாரத் தொண்டராக கடமையாற்றி இருந்தோம். இதுவரையும் எமது நியமனம் தொடர்பாக எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தமையால் கடந்த 2017-2018ம் ஆண்டுகளில் நியமனம் கோரி 120 நாட்கள் கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டதன் விளைவாக 2019.05.27, 2019.09.29 நேர்முக தேர்வு நடத்தப்பட்டு வழங்கப்பட்ட ஏனைய நியமனங்கள் இடைநிறுத்தப்பட்டது.
தற்போது எமது நியமனங்களில் கவனம் செலுத்தாது ஒரு இலட்சம் வேலை வாய்ப்பினூடாக எமது சுகாதாரத் தொண்டர் பட்டியலில் இருந்து சேவைக்காலம் குறைந்தவர்களையும், சுகாதாரதொண்டராக கடமையாற்றாதவர்களுக்குமான நேர்முகத்தேர்வு வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று நடைபெறுகின்றது.
குறித்த நேர்முகத்தேர்வினை நிறுத்தி நியாயமான முறையில் தொண்டராக சேவையாற்றிய அனைத்து சுகாதார தொண்டர்களுக்கும் சேவைகால அடிப்படையில் தகமைபாராது நியமனங்கள் வழங்குவதற்கு ஆவன செய்து தருமாறு வேண்டி நிற்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வவுனியா பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்திருந்ததுடன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்குவதற்காக பிரதேச செயாலாளர் விக்டர்ராச்சிடமும் மகஜரை கையளித்தனர்.
வடமாகாண பிரதம செயலாளரால் வழங்கப்பட்ட பட்டியலிற்கமைய குறித்த 28 பேருக்கு இன்று நேர்முகத்தேர்வுகள் இடம்பெறுகின்றன. ஏனையவர்களின் பட்டியல் எதிர்காலத்தில் கிடைக்கும் பட்சத்தில் நேர்முகத் தேர்வுகளை நடத்துவோம் என்று பிரதேசசெயலாளர் ஆர்பாட்டகாரர்களிடம் தெரிவித்திருந்தார்.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், சுகாதாரதொண்டர்களிற்கு நியமனம் வழங்கு, ஒரு இலட்சம் வேலைவாய்பின் கீழ் சுகாதாரதொண்டர்களிற்கான நேர்முகத்தேர்வை நிறுத்து போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.