சர்வதேச தகவல் தொழில்நுட்ப முயற்சியாண்மை மாநாட்டை நடாத்தவுள்ள வவுனியா பல்கலை!
வவுனியா பல்கலைக்கழகமானது 'தொழில்நுட்ப அடிப்படையிலான தொழில் முனைவுத்திறனும் எதிர்கால மனிதகுலமும்' என்ற கருப்பொருளின் கீழ் 32வது சர்வதேச தகவல் தொழில்நுட்ப முயற்சியாண்மை மாநாடொன்றை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக வவுனியா பல்கலைகழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் அ. அற்புதராஜா கருத்து தெரிவிக்கையில்,
''வவுனியா பல்கலைக்கழகத்தின் சார்பில் இம்மாதம் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் வவுனியா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள 32வது சர்வதேச தகவல் தொழில்நுட்ப மற்றும் முயற்சியாண்மை மாநாடு (ITAM–32) இடம்பெறவுள்ளது.
கல்வி மேம்பாடு,
அந்தவகையில் வவுனியா பல்கலைக்கழகம் இலங்கையில் விரைவாக வளர்ந்து வரும் ஒரு அரச பல்கலைக்கழகமாகும். இது கல்வி மேம்பாடு, ஆராய்ச்சி புதுமை மற்றும் பிராந்திய முன்னேற்றத்திற்கு பங்களிப்பினை வழங்குவதில் உறுதியாக செயற்பட்டு வருகின்றது.

வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள இப்பல்கலைக்கழகம், உயர் கல்வி அணுகலை விரிவுபடுத்துதல், ஆராய்ச்சி பண்பாட்டை ஊக்குவித்தல் தொழில் துறையுடனும் சமூகத்துடனும் உறவுகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கல்வி மற்றும் ஆராய்ச்சி முயற்சிகள் மூலம், இப்பல்கலைக்கழகம் புதுமை, டிஜிட்டல் முன்னேற்றம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு மையமாக தன்னை நிலைநிறுத்தி வருகிறது.
இந்த நோக்கத்தின் அடிப்படையில், சர்வதேச ITAM அமைப்பு, பல்கலைக்கழக தொழில் இணைப்பு (UBL) மற்றும் சர்வதேச விவகாரமையம் (CIA) ஆகியவற்றுடன் இணைந்து ITAM–32 மாநாட்டை வவுனியா பல்கலைக்கழகத்தில் நடாத்த முன்வந்துள்ளது.
ITAM மாநாடுஉலகளவில் அங்கீகரிக்கப்பட்ட, நீண்டகாலமாக நிறுவப்பட்ட ஒரு கல்வி மேடையாகும்.
பல ஆண்டுகளாக இது பல்வேறு நாடுகளில் வெற்றிகரமாக நடத்தப்பட்டு, உலகம் முழுவதும் உள்ள அறிஞர்கள், கொள்கை வடிவமைப்பாளர்கள், தொழில் முனைவோர், தொழில் துறை தலைவர்கள் மற்றும் நிபுணர்களை ஒன்றிணைத்துள்ளது.
ITAM மாநாடுபின்வரும் விடயங்களுக்கு ஒரு மேடையாக செயல்படுகிறது.
முன்னோடியான ஆராய்ச்சிகளைப் பகிர்வு செய்தல், வளர்ந்துவரும் தொழில்நுட்பப் போக்குகளைப் பற்றி கலந்துரையாடல், சர்வதேச கல்வி ஒத்துழைப்பை வலுப்படுத்தல், பல்கலைக்கழகம் மற்றும் தொழில் துறை நிலைத்த கூட்டாண்மைகளை உருவாக்கல் போன்றவற்றை நோக்கமாக கொண்டுள்ளது.
ITAM–32 மாநாட்டை நடத்துவதன் மூலம், வவுனியா பல்கலைக்கழகம் உலகளாவிய கல்வித் திறனின் வலையமைப்பில் பெருமையுடன் இணைகிறது. அந்தவகையில் இந்த ஆண்டின் மாநாடானது தொழில்நுட்ப அடிப்படையிலான தொழில் முனைவுத்திறனும் எதிர்கால மனிதகுலமும் என்ற கருப்பொருளின் அடிப்படையில் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இத்தலைப்பு இன்றைய வேகமாக மாறிவரும் உலக சூழலில் மிகவும் பொருத்தமானதாகும். செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் மாற்றம், தானியங்கி முறைமை, மற்றும் புதுமை சார்ந்த பொருளாதாரங்கள் உலகத்தை மாற்றிவருகின்ற இன்றைய சூழலில் இந்த தலைப்பு பொருத்தமானதாகவே தெரிவுசெய்யப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |