வாகன காப்பீட்டு கடன் காலெக்கெடு குறைப்பு! வெளியாகிய புதிய அறிவிப்பு
வாகன உரிமையாளர்களுக்கு மோட்டார் காப்பீட்டுத் திட்டங்களை வழங்கும் போது காப்பீட்டு நிறுவனங்களால் வழங்கப்படும் கடன் காலம் 30 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இலங்கை காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணைக்குழு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கையின்படி, இந்தத் திருத்தம் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளளது.
முழுமையாக ஒழிக்க நடவடிக்கை
தற்போது வாகன உரிமையாளர்கள் தங்களது காப்பீட்டுத் தொகையைச் செலுத்துவதற்கு 60 முதல் 90 நாட்கள் வரை கடன் காலம் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில், இந்த புதிய மாற்றத்தை ஆணைக்குழு மேற்கொண்டுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த இலங்கை காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணைக்குழு, எதிர்காலத்தில் இந்தக் கடன் காலத்தை முழுமையாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
சர்வதேச தரத்திற்கு ஏற்ப, காப்பீட்டுத் திட்டத்தைப் பெறுவதற்கு முன்னரே அதற்கான முழுமையான தொகையைச் செலுத்தும் முறையை நோக்கி இந்தத் துறை நகர்ந்து வருவதாக காப்பீட்டு சங்கத்தின் தலைவர் லசித விமலரத்ன தெரிவித்துள்ளார்.
வளர்ந்த நாடுகளில் காப்பீடு வழங்கப்படுவதற்கு முன்னரே கட்டணம் வசூலிக்கப்படும் நடைமுறை காணப்படுவதாகவும், அந்த ஒழுங்குமுறையை இலங்கையிலும் பலப்படுத்தும் நோக்கில் முதற்கட்டமாக மே முதலாம் திகதி முதல் இந்தக் கடன் காலம் 30 நாட்களாக வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |