லசந்த விக்ரமசேகர கொலை : வெளியான சந்தேகநபரின் புகைப்படம்
வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் (Lasantha Wickramasekara) சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்படும் சந்தேகநபரைக் கைது செய்வதற்கு காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
கடந்த 22ஆம் திகதி வெலிகம பிரதேச சபை தலைவரை இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளைக் கைது செய்வதற்காக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் (குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு) மற்றும் தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் ஆகியோரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ், பல காவல்துறை குழுக்கள் இணைந்து துரித விசாரணைகளை ஆரம்பித்தன.
வீட்டைச் சோதனையிட்டனர்
அதன்படி, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் திட்டமிட்ட நடவடிக்கையின் பின்னர், அநுராதபுரம் - கெகிராவ காவல்துறை பிரிவின் 50 வீட்டுத்தொகுதியில், இக் குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மறைந்திருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்தப் பிரிவின் அதிகாரிகள், காவல்துறை விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன், இன்று (26) அதிகாலையில், கைவிடப்பட்டிருந்த ஒரு வீட்டைச் சோதனையிட்ட போது, பெண் ஒருவர் உட்பட இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டபோது, அவர்களுடன் இருந்த மேலும் சில நபர்கள் காவல்துறையினருடன் முரண்பட்ட நிலையில் அதில் காயமடைந்த காவல்துறை அதிகாரி ஒருவர் சிகிச்சைகளுக்கான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு சந்தேகநபர்கள் குற்றத்திற்குப் பயன்படுத்திய ஒரு மோட்டார் சைக்கிள்,12 இலட்சத்துக்கும் அதிகமான பணம், ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் பாவனைக்காக பயன்படுத்தப்படும் உபகரணங்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, சந்தேகநபர்களுக்கு அடைக்கலம் கொடுத்த அப்பகுதியைச் சேர்ந்த மேலும் ஒரு சந்தேகநபரையும் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சந்தேகநபரின் புகைப்படங்கள்
அத்துடன், காவல்துறை அதிகாரிகளுடன் சண்டையிட்டு தப்பிச் சென்ற, அங்குலுகம பகுதியைச் சேர்ந்த ஹக்மன பரநலியனகே நுவன் தாரக என்பவரைக் கைது செய்ய காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
இந்த சந்தேகநபர் சுமார் 5 அடி 6 அங்குலம் உயரமானவர் மற்றும் வலது கையின் மேல் பகுதியில் ஆங்கிலத்தில் “ANURADA” என்றும், இடது கையில் “හිතුමතේ ජීවිතේ” (சுயாதீன வாழ்க்கை) என்றும் பச்சை குத்தியுள்ளார்.

இந்த சந்தேகநபரின் புகைப்படங்கள் உங்களுடன் பகிரப்படுகின்றதாகவும் இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு காவல்துறையினர் கோரியுள்ளனர்.
அதன்படி, காவல்துறை மா அதிபருக்கு தெரிவிக்க (WhatsApp) - 071 859 8888 என்ற எண்ணையும் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு தெரிவிக்க 011 233 7162 / 071 859 2087 ஆகிய எண்களையும் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதேவேளை நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு, குற்றப் புலனாய்வுப் திணைக்களம், தென் மாகாணப் பிரிவுக் குற்றப் புலனாய்வுப் பணியகம், மாத்தறை மற்றும் அநுராதபுரம் பிரிவுக் குற்றப் புலனாய்வுப் பணியகம், காவல்துறை விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவ அதிகாரிகள் இணைந்து சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 2 நாட்கள் முன்