யாழ். உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் தரம் பாதிப்பு : விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
இலங்கையின் பல நகர்ப்புறங்களில் கடந்த 24 மணித்தியாலங்களில் காற்றின் தரம் 'சற்று ஆரோக்கியமற்ற' நிலையை எட்டியுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
இதன்படி கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் காற்றின் தரம், உணர்திறன் மிக்க குழுக்களுக்கு (sensitive groups) ஆரோக்கியமற்ற மட்டத்தை எட்டியுள்ளது.
குறித்த மாவட்டங்களில் காற்றின் தரச் சுட்டெண் (AQI) முறையே 92 மற்றும் 100 ஆகப் பதிவாகியுள்ளது.
காற்றின் தரச் சுட்டெண்
எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கான முன்னறிவிப்பின்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரச் சுட்டெண் 48 முதல் 112 வரை நிலவக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இதன்படி யாழ்ப்பாணம் (100–108) மற்றும் புத்தளம் (104–112) ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் 'சற்று ஆரோக்கியமற்ற' (Slightly Unhealthy) மட்டத்தில் இருக்கும்.
அத்துடன் மொனராகலை மாவட்டத்தில் காற்றின் தரச் சுட்டெண் மிகக் குறைந்த அளவாக 46ஆக பதிவாகியுள்ளது.
மேலும் காலை 8:00 முதல் 10:00 வரையும், மாலை 3:00 முதல் 5:00 வரையும் காற்றின் மாசு அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுகாதாரப் பாதிப்பு
காற்றின் தரச் சுட்டெண் (AQI) முக்கியமாக PM2.5 எனப்படும் நுண் துகள்களின் அளவை வைத்தே கணக்கிடப்படுகிறது.

இவை சுவாசிக்கும் போது நுரையீரலுக்குள் ஊடுருவிச் சென்று பல்வேறு சுகாதாரப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை. காற்றின் தரம் குறைந்துள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்கள் மற்றும் சுவாசக் கோளாறு உள்ளவர்கள் இது குறித்து அவதானமாக இருக்குமாறு சுகாதாரப் பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |