மீண்டும் வாக்கெடுப்புக்கு வரும் கொழும்பு மாநகர சபை வரவு செலவுத் திட்டம்
கொழும்பு மாநகர சபையின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் இந்த மாதம் 31 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் என்றும், 22 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட அதே வரவு செலவுத் திட்டம் அன்றைய தினம் சமர்ப்பிக்கப்படும் என்றும் பிரதி மேயர் ஹேமந்த குமார தெரிவித்துள்ளார்.
மக்கள் சார்ந்த வரவு செலவுத் திட்டத்தை ஆளும் கட்சி சமர்ப்பித்துள்ளதாகவும், உறுப்பினர்கள் 22 ஆம் அதை தோற்கடிக்க முயற்சித்த போதிலும் வரவு செலவு ஆவணத்தில் எந்த பிழைகளும் சுட்டிக்காட்டப்படவில்லை எனவும் பிரதி மேயர் குறிப்பிட்டுள்ளார்.
குறைபாடுகள்
நிலைக்குழுக்களின் போது வரவு செலவு ஆவணத்தில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்ட வாய்ப்பு இருந்ததாகவும், ஆனால் அந்த சந்தர்ப்பங்களில் எந்த பிழைகளும் சுட்டிக்காட்டப்படவில்லை என்றும், ஆளும் கட்சி மக்களுக்கு சாதகமான வரவு செலவுத் திட்ட ஆவணத்தை சமர்ப்பித்துள்ளதாகவும் அதன்போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி, எதிர்வரும் 31 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்ட ஆவணத்தை நிறைவேற்ற உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்ப்பதாக பிரதி மேயர் ஹேமந்த கூறியுள்ளார்.
வாக்கெடுப்பு
தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் உள்ள கொழும்பு மாநகர சபையின் 2026 வரவு செலவுத் திட்டம் கடந்த 22 ஆம் திகதி 3 வாக்குகளால் பெரும்பான்மையாக தோற்கடிக்கப்பட்டது.

கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டத்தை அங்கீகரிப்பதற்காக கடந்த 22 ஆம் திகதி பிற்பகல் நடைபெற்ற வாக்கெடுப்பில், வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 57 வாக்குகளும், எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |