சமூக ஊடகங்கள் தொடர்பில் சட்டத்திற்கு அமைய செயற்படுவோம் - அஜித் ரோஹன
தேவை ஏற்பட்டால், நாட்டிற்குள் சமூக வலைத்தள ஊடகங்கள் சம்பந்தமாக நடைமுறையில் இருக்கும் சட்டத்திற்கு அமைய செயற்படுவதற்கு தயார் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன ( Ajith Rohana) தெரிவித்துள்ளார்.
மிரிஹான பிரதேசத்தில் நேற்று நடந்த சம்பவம் தொடர்பாக இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இதன் போது, ஏதேனும் ஒரு வன்முறை செயலுக்காக சமூக ஊடகங்கள் வாயிலாக தூண்டுதல்கள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுமாயின் எடுக்க போகும் அடுத்தக் கட்ட நடவடிக்கை என்னவென செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்து அஜித் ரோஹன, ஏதேனும் கலவர சம்பவம் ஒன்றில் ஈடுபட சமூக ஊடகங்ள் மூலம் தூண்டுதல் மேற்கொள்ளப்பட்டால் அல்லது அப்படி தூண்டப்படும் ஆபத்து இருக்குமாயின் அது சம்பந்தமாக நடைமுறையில் இருக்கும் சட்டத்திற்கு அமைய நடவடிக்கை எடுக்க நேரிடும் எனக் கூறியுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் காரணமாக சமூக ஊடகங்களில் அரசாங்கத்திற்கும் அரச தலைவரிற்கும் எதிராக பொதுமக்கள் கடும் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இது அரசாங்கத்திற்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், சமூக ஊடகங்களுக்கு ஏதேனும் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
