மாகாண அதிகாரங்களை பறிக்கும் அனுர அரசாங்கம் : கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு
மாகாணத்தில் உள்ள அதிகாரங்களை மத்திக்கு கொண்டு செல்வதில் புதிய அரசாங்கம் முனைப்புடன் செயற்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
இன்று யாழ்ப்பாணத்தில் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இதனை சுட்டிக்காட்டினார்.
இன்றையதினம் தெல்லிப்பழை பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டத்தில் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையை மாகாண அரசிடம் இருந்து முழுமையாக மத்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என கூட்டத்தின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்ததனை தொடர்ந்து மாகாண அதிகாரம் அனைத்தையும் மத்திக்கு கொண்டு செல்லும் நோக்கில் குறித்த அரசாங்கம் செயற்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையினை ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தேசிய வைத்தியசாலையாக உயர்த்த வேண்டும் என்ற கருத்தினை தெரிவித்திருந்தார் ஆனால் அந்த வாக்குறுதியை இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நிறைவேற்றவில்லை.

தேவையான வசதிகளை போதனா வைத்தியசாலைக்கு வழங்கவில்லை. போதனா வைத்தியசாலைக்கு வழங்கப்படும் அபிவிருத்திகள் அனைத்தும் புலம்பெயர் தமிழர்கள் தமது நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட அபிவிருத்திகள் எனவும் தெரிவித்தார்.
அனுராதபுரம் வைத்தியசாலை
எனவே அரசாங்கம் வடக்கில் உள்ள வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்யாது அனுராதபுரம் வைத்தியசாலையினை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த அரசாங்கம் மத்திய அரசுக்கு கீழுள்ள அதிகாரங்களை கூட வழங்காது புறக்கணித்து வருகிறது. என்றார்.
செம்மணிக்கு நீதி அமைச்சர்
செம்மணிக்கு நீதி அமைச்சர் வருவது தொடர்பாக குறிப்பிட்டார். செம்மணி தொடர்பான வழக்கில் எனது தந்தையார் கிருசாந்தியின் படுகொலை தொடர்பில் நீதிமன்றில் வழக்காடினார்.

380 இற்கும் மேற்பட்ட என்புக் கூடுகள் வெளிக்கொணரப்பட்டுள்ளன. இதனைத் தாண்டி முழுமையாக அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு 600 வகையான என்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்படும்.
இனப்படுகொலை நடைபெறவில்லை என்று சொல்கிற அரசாங்கம் செம்மணியில் காணப்படும் என்பு கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்ட பின்னர் இனப்படுகொலைகள் கொத்துக் கொத்தாக இடம் பெற்றது என்பதனை நிரூபிக்க முடியும் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். என்றார்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |