கண்கள் தோண்டி எடுக்கப்பட்டு வீதியில் வீசப்பட்ட உடல் : செம்மணி - முள்ளிவாய்க்கால் வரையான சாட்சியங்கள்
செம்மணி மனிதப் புதைகுழி விடயத்தில் ஐ.நாவினுடைய அங்கீகாரத்துடன் அதிகாரம் மிக்க ஒரு அமைப்பு விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும், இல்லையெனில் செம்மணி மனிதப்புதைகுழிக்கான நீதி கிடைப்பது என்பது சாத்தியமற்றது என மனித உரிமை செயற்பாட்டாளரான அருட்தந்தை பேர்ணாட் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் களம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போது கடந்தகால வரலாறுகளை மேற்கோள் காட்டி அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இப்போது செம்மணி புதைகுழி அகழ்வுப்பணிகள் ஓரளவு அமைதியான சூழலில் நடக்கின்றது. ஆனால் சோமரத்ன ராஜபக்ச புதைகுழியை அடையாளம் காட்டிய காலப்பகுதியில் பயங்கரமான நிலைமையே இருந்தது.
அந்தக் காலப்பகுதியில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் வெள்ளை வான் ஒன்று இலக்கத்தகடு இல்லாமல் சுற்றித்திரிந்தது. அதாவது வீடுகளுக்கு முன்னால் குறித்த வாகனத்தை நிறுத்தி சிலரை வாகனத்தில் ஏற்றிச்செல்வார்கள், பின்னர் அவர்களை காணமுடியாது. அவர்கள் காணாமலாக்கப்பட்டு விடுவார்கள்.
சிலநாட்களின் பின்னர் சில உடல்கள் வீதியோரத்தில் இருந்தது. அதில் ஒன்றுக்கு கண்கள் இல்லை. தோண்டி எடுக்கப்பட்டு விட்டது. மற்றொரு உடல் அவயங்கள் வெட்டப்பட்ட நிலையில் இருந்தது.
குறித்த வாகனம் வீதியால் பயணிக்கின்ற போது அங்கே இருந்த சோதனைச் சாவடிகளில் கூட மறிக்கப்படவில்லை என்பதே ஆச்சரியம். வாகனங்களில் சென்றவர்கள் ஆயுதங்களுடன் சென்று வீடுகளில் இருந்தவர்களை மிரட்டி கடத்திச் சென்றார்கள்.
கிருசாந்தியின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டுவதற்காக 1999 காலப்பகுதியில் சோமரத்ன ராஜபக்ச செம்மணிக்கு வருகை தந்த போது நீதிமன்ற அனுமதி பெற்று அவ்விடத்திற்கு பிரசன்னமாகியிருந்தோம்.
இதன்போது ராஜபக்ச எந்த தயக்கமும் இன்றி உடல்கள் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டியதை நேரில் பார்த்தேன்.” என தெரிவித்தார்.
இது குறித்த மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க.....
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |