எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட வர்த்தகர் : வெளியான அதிர்ச்சித் தகவல்
கடந்த ஜூன் 26 ஆம் திகதி பிற்பகல் மஹவ காட்டுப் பகுதியில் காருக்குள் எரிந்த நிலையில், ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் காவல்துறை விசாரணைகளில் மேலும் பல தகவல்கள் வெளிவந்துள்ளன.
வடமேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் பல காவல்துறை குழுக்களின் கீழ் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, உயிரிழந்த நபர் தனது காரில் பயணித்தபோது சந்தேக நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டு, அவரிடம் இருந்த தங்க நகைகள், கையடக்கத் தொலைபேசி மற்றும் பணத்தை எடுத்துச் சென்றுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் இருவர் கைது
நேற்று (29) தொரடியாவ மற்றும் மஹவ பகுதிகளில் 1.4 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பணம் மற்றும் தங்க பொருட்களுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 19 மற்றும் 27 வயதுடைய மஹவ மற்றும் பிலெஸ்ஸ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என சுட்டிக்காட்டப்படுகின்றது.
தீக்காயங்களால் உயிரிழந்த குருநாகல் மில்லாவ பகுதியில் வசிக்கும் 49 வயதுடைய குறித்த வர்த்தகர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதன் பின்னர் எரிக்கப்பட்டிருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.
கண்டுபிடிக்கப்பட்ட சடலம்
காட்டுப் பகுதியில் ஒரு வாகனத்திற்குள் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்டதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், ஜீப்பின் முன் இருக்கையில் எரித்துக் கொல்லப்பட்ட நபரின் சடலத்தைக் கண்டுபிடித்தனர்.
அந்த நபர் காணாமல் போனதாக அவரது மனைவி கடந்த 25 ஆம் திகதி தொரடியாவ காவல் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
மனைவியின் முறைப்பாட்டில், உயிரிழந்த நபர் சம்பவத்தன்று தலை முடியை வெட்டுவதற்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் சம்பவம் குறித்து மஹவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
