ஐ.நா அறிக்கை தெளிவுபடுத்தலில் நீக்கப்பட்ட சாணக்கியன் சிறப்புரிமை
தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளரின் அறிக்கை தொடர்பான விடயங்களை முன்வைத்தல் மற்றும் விடயங்களைத் தெளிவுபடுத்த தனக்குக் கிடைத்த சந்தர்ப்பம் நீக்கப்பட்டதால் இவ்வாறு சிறப்புரிமை நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (09.10.2025) சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்விடயத்தை சபாநாயகரின் அவதானத்திற்கு கொண்டு வந்தார்.
கேள்வி நேரம்
மேலும் இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “நேற்றுமுன்தினம் 08 ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தின்போது கேள்வி கேட்பதற்கான வினாக்களை கடந்த 02 ஆம் திகதியன்று முன்வைத்திருந்தேன்.
இந்த கேள்விகளை திருத்தம் செய்யுமாறு எனக்கு அறிவுறுத்தப்பட்ட நிலையில், திருத்தம் செய்யப்பட்ட கேள்விகளை மறுநாள் 03 ஆம் திகதியன்று முன்வைத்திருந்தேன்.ஒருசில காரணிகளைக் குறிப்பிட்டு அந்தக் கேள்விகள் புறக்கணிக்கப்பட்டன.
எனினும், அன்றைய தினமே மீண்டும் கேள்விகளைத் திருத்தம் செய்து அவற்றை முன்வைத்திருந்தேன். இவ்வாறான நிலையில் நேற்றுமுன்தினம் (08.10.2025) என்னால் இறுதியாக திருத்தம் செய்யப்பட்ட கேள்விகளை பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தின் போது முன்வைத்திருந்தேன்.
இந்தக் கேள்விகள் செவ்வாய்க்கிழமை 07 ஆம் திகதி கிடைத்ததால் அதற்கு பதிலளிப்பதற்கு 02 வாரங்கள் கால அவகாசத்தை பிரதமர் கோரியிருந்தார்.புறக்கணிக்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கத் தான் தயாராக இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
சிறப்புரிமை மீறல்
பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தின் போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரின் அறிக்கை தொடர்பான விடயங்களை முன்வைத்தல் மற்றும் விடயங்களை தெளிவுபடுத்திக் கொள்வதற்காக எனக்கு கிடைத்த சந்தர்ப்பம் நீக்கப்பட்டுள்ளது.
இதனால் எனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது என்று கருதுகிறேன். இந்த சிறப்புரிமை மீறல் விடயத்தை சிறப்புரிமை குழுவில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். கேள்விகள் தாமதமாகவே கிடைத்ததாக குறிப்பிடப்படுகிறது.
இவ்விடயத்தில் பிரதமர் அலுவலகம் தாதமதாக செயற்பட்டுள்ளதா அல்லது பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் அலுவலகம் தாமதமாக செயற்பட்டுள்ளதா என்பதை ஆராயுமாறு கோருகின்றேன்’’ என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
